திருப்புவனம் தாலுகா அலுவலகத்தில் சி.சி.டி.வி., பொருத்த நடவடிக்கை
திருப்புவனம்: திருப்புவனம் தாலுகா அலுவலகத்தில் சி.சி.டி.வி., கண்காணிப்பு கேமரா பொருத்த மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். திருப்புவனம் தாலுகா அலுவலகத்தில் சமூக நல பாதுகாப்பு திட்டம், வட்ட வழங்கல் பிரிவு, நில அளவை பிரிவு, இ சேவை மையம், ஆதார் சேவை மையம் உள்ளிட்டவை செயல்படுகின்றன. தாசில்தார், துணை தாசில்தார் உட்பட 26 பேர் பணிபுரிகின்றனர். தினசரி முதியோர் ஒய்வூதியம், பட்டா மாற்றம், ஸ்மார்ட் கார்டு, ஆதாரில் திருத்தம் என நுாற்றுக்கும் மேற்பட்டவர்கள் வந்து செல்கின்றனர். இரண்டு தளங்களுடன் செயல்படும் அலுவலகத்தில் கண்காணிப்பு கேமரா ஏதும் இல்லாததால் புரோக்கர்கள் ஆதிக்கம் உள்ளது. எந்த சான்று வேண்டுமென்றாலும் இணையதளம் மூலம் விண்ணப்பித்தாலும் புரோக்கர்கள் மூலம் சென்றால் தான் உடனுக்குடன் கிடைக்கும், இல்லாவிட்டால் நாள்கணக்கில் காத்து கிடக்க வேண்டி வரும். திருப்புவனம் தாலுகாவில் ஏராளமான செங்கல் தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகின்றன. இதற்கு தேவையான சவடு மண் அள்ள அனுமதி பெறுவது உள்ளிட்டவற்றிற்கு புரோக்கர் மூலம் சென்றால் மட்டுமே காரியம் நிறைவேறும் என்ற நிலை உருவாகியுள்ளது. மேலும் செங்கல் தொழிற்சாலைகளில் வெளி மாநிலத்தவர் உள்ளிட்ட பலரும் உரிய ஆவணம் இன்றி தங்கி பணிபுரிகின்றனர். மாவட்டம் முழுவதும் சோதனை நடந்தாலும் திருப்புவனம் பகுதியில் மட்டும் எந்த வித சோதனையும் நடத்தப்படவில்லை. அதிகாரிகள் யாரும் தொழிற்சாலைகளுக்குள் உரிய அனுமதியின்றி செல்ல முடியாது. மிகப்பெரிய இரும்பு கதவுகளுக்கு பின் தொழிற்சாலைகள் செயல்படுகின்றன. தொழிற்சாலைகளுக்கு ஆய்விற்கு எந்த அதிகாரிகளும் செல்லாமல் இருப்பதற்கு புரோக்கர்கள் தலையீடே காரணம். திருப்புவனம் தாலுகா அலுவலகத்தில் இரண்டு தளங்களிலும் சி.சி.டி.வி., கேமரா பொருத்தினால் முறைகேடு ஓரளவிற்கு குறைய வாய்ப்புள்ளது. சமீபத்தில் மனு திருட்டு உள்ளிட்ட சம்பவங்களுக்கு விசாரணை மந்த கதியில் நடப்பதற்கு சி.சி.டி.வி., கேமரா இல்லாதது தான் காரணம் எனவே மாவட்ட நிர்வாகம் அவசர நிலை கருதி சி.சி.டி.வி., கேமரா பொருத்த வேண்டும்.