தீபாவளி பலகாரங்களை தரமான எண்ணெய்யில் தயாரிக்க வேண்டும் கலெக்டர் ஆஷா அஜித் தகவல்
சிவகங்கை : தீபாவளியை முன்னிட்டு பலகாரங்கள் தரமான மூலப்பொருட்களை கொண்டு, சுகாதாரமான முறையில் தயாரித்திருக்க வேண்டும் என கலெக்டர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்.அவர் கூறியதாவது:தீபாவளி பலகாரம், பேக்கரிகளில் உணவு பொருட்களை சுகாதாரமான முறையில் தயாரிக்க வேண்டும். உணவு பொருளில் கலப்பட பொருள், செயற்கை நிறமிகளை பயன்படுத்தக்கூடாது.இனிப்பு, கார வகைகள் தயாரிக்கும் பணியில் ஈடுபடுவோர் முழு உடல் நலத்துடன் இருக்க வேண்டும். ஒரு முறை பயன்படுத்திய சமையல் எண்ணெய்யை மறுபடியும் பயன்படுத்தக்கூடாது. பேக்கிங் செய்த உணவு பொருட்களில் தயாரிப்பாளர் முகவரி, பொருளின் பெயர், தயாரிப்பு, பேக்கிங் தேதி, காலாவதி தேதி, மற்றும் சைவ, அசைவ குறியீடு அவசியம் குறிப்பிட வேண்டும். உணவு பொருட்களை விற்பனை செய்த பின் தரும் ரசீது, பில்களில் உணவு கடையில் லைசென்ஸ், பதிவு எண் அச்சடித்திருக்க வேண்டும். உணவு பொருட்களை ஈக்கள் மற்றும் கிருமி தொற்று இல்லாத சுகாதாரமான முறையில் பாதுகாக்க வேண்டும். பண்டிகை கால பலகாரம் தயாரிப்போர், விற்பனையாளர்கள் கண்டிப்பாக http://foscos.fssai.gov.inஇணையதளத்தில் பதிவு செய்து லைசென்ஸ் பெற்றுக்கொள்ள வேண்டும். உணவு புகார்கள் தொடர்பாக 94440 42322 என்ற வாட்ஸ் ஆப் எண்ணில் தெரிவிக்கலாம், என்றார்.