சிவகங்கை அரசு மருத்துவமனையில் இரவில் கூடுதல் போலீசார் அவசியம் டாக்டர்கள் கோரிக்கை
சிவகங்கை: சிவகங்கை மருத்துவமனையில் இரவு நேரத்தில் மருத்துவமனை பாதுகாப்பிற்கு கூடுதல் போலீசார்களை நியமிக்க வேண்டும் என டாக்டர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.சிவகங்கை அரசு மருத்துவக்கல்லுரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவு, மகப்பேறு உள்ளிட்டிட்ட பிரிவுகள் 24 மணிநேரமும் செயல்பட்டு வருகிறது. மருத்துவமனைக்கு காலை 7:00 மணி முதல் மதியம் 12:00 மணி வரை புறநோயாளிகளாக 1000க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்கு வந்து செல்கின்றனர். மதியம் 12:00 மணிக்கு மேல் வருபவர்களுக்கு அவசர சிகிச்சை பிரிவு வார்டில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. மருத்துவக் கல்லுாரியில் 800 பேர் உள்நோயாளிகளாக உள்ளனர். 500 மருத்துவ மாணவர்கள் 300க்கும் மேற்பட்ட செவிலியர்கள் 250 டாக்டர்கள், 250க்கும் மேற்பட்ட ஒப்பந்த காவலாளி உள்ளிட்ட துாய்மை பணியாளர்கள் பணியாற்றுகின்றனர். மருத்துவமனையில் இரவு நேரத்தில் தினசரி 500க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்கு வந்து செல்கின்றனர். அதேபோல் ஒரு சில மது பிரியர்களும் இரவு நேரத்தில் மருத்துவமனை வளாகத்தில் உள்ள டூவீலர் ஸ்டாண்டில் தஞ்சம் அடைகின்றனர்.இரவு நேரத்தில் நோயாளியின் உறவினர்கள் போல் சிலர் வந்து இரவில் தங்கிவிட்டு காலையில் செல்வதாகவும் புகார் உள்ளது. இதனால் நோயாளிகளின் உறவினர்களின் அலைபேசி அடிக்கடி திருடுபோவதாகவும் புகார் உள்ளது. இவ்வாறு வரக்கூடிய ஒரு சிலர் பணியில் இருக்கும் காவலாளி சொல்வதை கேட்பதில்லை அவர்களிடம் தகராறில் ஈடுபடுகின்றனர். நேற்று முன்தினம் இரவு நோயாளியின் உறவினர் ஒருவர் மருத்துவமனை காவலாளியை தாக்கியுள்ளார். இதனால் இரவு நேரத்தில் மருத்துவமனையில் டாக்டர்கள் பணி செய்ய அச்சப்படுவதாக புகார் எழுந்துள்ளது. எனவே இரவில் கூடுதலாக போலீசாரை நியமிக்கவேண்டும் என டாக்டர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.