உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / தேவகோட்டையில் இரட்டை வாக்காளர்கள்: வாக்காளர் பட்டியல் சீரமைக்கப்படுமா

தேவகோட்டையில் இரட்டை வாக்காளர்கள்: வாக்காளர் பட்டியல் சீரமைக்கப்படுமா

தேவகோட்டை: தேவகோட்டை தாலுகாவில் வாக்காளர் பட்டியலை ஆய்வு செய்து இரட்டை வாக்காளர்களை நீக்கி வாக்காளர் பட்டியலை சீரமைக்க வேண்டுமென அரசியல் கட்சியினர் எதிர்பார்க்கின்றனர். அண்மையில் தேர்தல் கமிஷன் பீகாரில் வாக்காளர் பட்டியலில் ஆய்வு செய்ததில் தவறான பல லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டு, புதிய பட்டியல் வெளியிடப்பட்டது. தமிழ்நாட்டிலும் அது போல 2,3 இடங்களில் வாக்காளர் பதிவு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக, காரைக்குடி தொகுதிக்குட்பட்ட தேவகோட்டை தாலுகாவில் ஆயிரக்கணக்கானோர் ஒரு இடத்திற்கும் மேற்பட்ட இடங்களில் வாக்காளராக பட்டியலில் உள்ளனர். முன்னர், வீட்டுக்கு வீடு ஆசிரியர்கள், அலுவலர்கள் வந்து ஆய்வு செய்து வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டது. அதில் நேரடி விசாரணை சரியாக நடந்து, தவறு குறைவாகவே இருந்தது. தற்போது, ஆதார் அட்டை முழுமையாக வாக்காளர் அட்டையுடன் இணைக்கப்படாததால் ஒரு வாக்காளருக்கு பல இடங்களில் பதிவு இருப்பதை நீக்க முடியவில்லை. தேர்தல் நேரத்தில் வாக்காளர் பட்டியலை சரி செய்வதாக அறிவிக்கப்பட்டாலும், போதிய பணியாளர் இல்லாததால் நேரடி விசாரணை வீடு தோறும் நடப்பதில்லை. தேர்தல் கமிஷன் வாக்காளர் பட்டியலை போதிய பணியாளர் நியமித்து பல கட்ட ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகும். தேவகோட்டை கிராமங்களில் இருந்து குழந்தைகளை படிக்க வைக்கவும், வேலை காரணமாக தேவகோட்டை நகர் பகுதியில் சொந்த வீடு வாங்கியோ, அல்லது வாடகை வீடுகளிலோ பலர் வசிக்கின்றனர். இவர்களுக்கு சொந்த ஊரிலும், வசிக்கும் நகரிலும் ஓட்டு உள்ளது. தேவகோட்டை சுரேஷ் கூறுகையில், தேர்தலின் போது சிலர் கிராமத்திலும் ஓட்டு போட்டு விட்டு, நகரில் வந்தும் போடுகிறார்கள். வாக்காளர் பட்டியல் சீரமைப்பு என்பது நல்ல நடவடிக்கை. ஆனால் தேர்தல் கமிஷன் தேர்தலுக்குள் முழுமையாக செய்து முடிக்க வேண்டும்' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை