செட்டிநாடு கால்நடை பண்ணை வளாகத்தில் அத்துமீறி மரங்கள் வெட்டி அகற்றம்
காரைக்குடி; செட்டிநாடு கால்நடை பண்ணை வளாகத்திலுள்ள பல மரங்கள் மின்கம்பம் நடும் பணிக்காக முன் அனுமதியின்றி வெட்டப்படுவதாக போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. காரைக்குடி அருகே செட்டிநாடு கால் நடைப் பண்ணை 1957ல் ஆயிரத்து 907 ஏக்கரில் தொடங்கப்பட்டது. இதில் 300 ஏக்கரில் மானாவாரி ஆராய்ச்சி நிலையம் செயல்பட்டு வருகிறது. இக்கால்நடை பண்ணையில், உம்பளாச்சேரி, ஆலம்பாடி பர்கூர், காங்கேயம், புலிக்குளம் மற்றும் முர்ரா எருமை வகை என ஆயிரத்து 200க்கும் மேற்பட்ட நாட்டின மாடுகள் மற்றும் ஆடுகள் உள்ளன. விவசாயிகளுக்கு மானியத்தில் கால்நடைகள் வழங்கப்படுகிறது. செட்டிநாடு கால்நடை பண்ணை வளாகத்தில் ஆயிரக்கணக்கான மரங்கள் உள்ளன. இந்நிலையில், பள்ளத்துார் கானாடுகாத்தான் நெடுஞ்சாலையையொட்டி, தனியாருக்கு சொந்தமான சோலார் அமைக்கும் பணிக்காக, மின்கம்பம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இப்பணிக்காக செட்டிநாடு கால்நடை பண்ணை வளாகத்தில் வேலியை ஒட்டி அமைந்துள்ள மரங்கள் வெட்டப்பட்டுள்ளது. எவ்வித முன் அனுமதியும் பெறாமல் மரங்கள் வெட்டப்பட்டுள்ளதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. செட்டிநாடு கால்நடை பண்ணை அதிகாரிகள் கூறுகையில்: தனியார் சார்பில் மின்கம்பம் நடும் பணிக்காக முன் அனுமதியின்றி மரங்கள் வெட்டப்பட்டுள்ளது. இதுகுறித்து எங்களது உயர் அதிகாரிகளுக்கு தகவல் அளித்துள்ளதோடு, போலீசிலும் புகார் கொடுத்துள்ளோம் என்றனர்.