மீன்பிடி விழாவில் குவிந்த மக்கள் மயங்கி விழுந்து விவசாயி பலி
சிங்கம்புணரி:சிங்கம்புணரி அருகே நடந்த மீன்பிடி திருவிழாவில் ஏராளமானோர் குவிந்தனர். இதில் விவசாயி மயங்கி விழுந்து இறந்தார்.சிவகங்கை மாவட்டம் சிவபுரிபட்டி ஊராட்சி மட்டிக்கரைப்பட்டி அருகே உள்ள மட்டிக்கண்மாய் 200 ஏக்கர் பரப்பு கொண்டது. கடந்தாண்டு இக்கண்மாய் மறுகால் பாய்ந்து விவசாயம் நடந்தது. அறுவடை முடிந்து கண்மாயில் தண்ணீர் குறைந்ததால் மீன்பிடித்திருவிழா நடத்த ஆயக்கட்டு தாரர்கள் முடிவுசெய்தனர். இதைத்தொடர்ந்து நேற்று மீன்பிடித்திருவிழா நடத்தப்பட்டது. காலை 6:30 மணிக்கு ஆயக்கட்டுதாரர்கள் வெள்ளைத் துண்டு வீசி துவக்கி வைத்தனர்.கரைகளில் காத்திருந்த மக்கள் ஒரே நேரத்தில் கண்மாயில் இறங்கி ஊத்தா, பரி, வலை, சேலை உள்ளிட்ட உபகரணங்களை கொண்டு மீன்களை பிடித்தனர். இதில் பலருக்கும் விரால், ஜிலேபி, கெண்டை, கெளுத்தி மீன்கள் கிடைத்தன. மீன்பிடித்திருவிழாவின் போது எஸ்.புதுார் கேசம்பட்டியை சேர்ந்த விவசாயி பாலசுப்பிரமணியன்42, மயங்கி விழுந்து உயிரிழந்தார். ஏரியூர் கிராமத்தில் உள்ள ஏரிக்கண்மாயில் நடந்த மீன்பிடித் திருவிழாவிலும் பலர் பங்கேற்றனர்.