உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / விழிப்புணர்வு இல்லாததால் குழந்தை திருமணம் அதிகரிப்பு

விழிப்புணர்வு இல்லாததால் குழந்தை திருமணம் அதிகரிப்பு

இந்தியாவில் குழந்தை திருமணங்களை தடுக்கும் பொருட்டு 1929ம் ஆண்டு குழந்தை திருமணத் தடைச் சட்டம் முதன் முறையாக கொண்டு வரப்பட்டது. 2006ம் ஆண்டு ஆண்களுக்கு திருமண வயது 21 பெண்களுக்கு 18 என சட்டம் நிறைவேற்றப்பட்டது. கடந்த 2021ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் பெண்களின் திருமண வயதை 21 ஆக உயர்த்தவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.குழந்தை திருமணத்தை தடுக்க அரசு முயற்சி செய்தாலும் குழந்தை திருமணம் என்பது போதிய விழிப்புணர்வு இல்லாததால் தொடர் கதையாகி வருகிறது.

அதிகரிக்கும் குழந்தை திருமணம்

சிவகங்கை மாவட்டத்தின் முக்கிய தொழிலாக விவசாயமே உள்ளது. மாவட்டத்தில் 75 சதவீதம் கிராமப் பகுதிகளே உள்ளன. நகர் பகுதிகளை விட கிராமங்களில் அதிக அளவில் குழந்தை திருமணம் நடைபெறுகிறது. உறவுகள் விட்டுப் போகக் கூடாது என்பதற்காகவும், தங்களது பிள்ளைகள் விருப்பத்திற்காக பிள்ளைகளின் வயதை பார்க்காமலே குழந்தை திருமணம் நடந்து வருகிறது. இதனால், மாணவிகளின் எதிர்காலம் மட்டுமின்றி, கல்வியும் கேள்விக்குறியாகி வருகிறது. இம்மாவட்டத்தில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு வரை குறைந்திருந்த குழந்தை திருமணம் தற்போது மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளதாக சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர். காரைக்குடி வட்டாரத்தில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும், பல்வேறு குழந்தை திருமணங்கள் தடுக்கப்பட்டுள்ளதோடு, குழந்தைகள் திருமணம் சம்பந்தமாக பல்வேறு வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

போதிய விழிப்புணர்வு இல்லை

குழந்தை திருமணத்தை தடுக்க மாவட்டம் தோறும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இவர்கள் கிராமங்களில் பள்ளிகள் தோறும் குழந்தை திருமணம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி குழந்தை திருமணத்தை தடுக்கும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தவிர, சமூக நல அமைப்புகள், தொண்டு நிறுவனங்கள் உட்பட பல்வேறு அமைப்புகளும் குழந்தை திருமணத்தை தடுப்பதற்கு பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.ஆனாலும் கிராமப்புறங்களில் குழந்தை திருமணத்தை தடுக்க முடியாமல் குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகள் திணறி வருகின்றனர்.அதிகாரிகள் கூறுகையில்: பள்ளிகள் தோறும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். கடந்த சில மாதங்களாக குழந்தை திருமணம் அதிகரித்துள்ளது.பெண் பிள்ளைகள் தங்களது வயது தெரியாமலேயே, தனக்கு பிடித்தவருடன் விரும்பி சென்று விடுகின்றனர்.அவர்களை அழைத்து வரும் பெற்றோர் வேறு வழியின்றி திருமணம் செய்து வைக்கின்றனர். பெரும்பாலும் ஆணும் பெண்ணும் ஒரே சமுதாயத்தைச் சேர்ந்தவர்களாக இருப்பதாலும், உறவினர்களாக இருப்பதாலும் இது குறித்து யாரும் தகவல் தெரிவிப்பதில்லை.வெளியே தெரியாமலேயே திருமணத்தை முடித்து விடுகின்றனர். திருமணம் குறித்து தகவல் கிடைத்தால், உடனடியாக சென்று திருமணத்தை தடுத்து நிறுத்துகிறோம். ரகசியமாக சில திருமணங்கள் நடந்து விடுகிறது. சிறுமி கர்ப்பம் அடைந்த பிறகு தான் தெரிகிறது. இதனால், மகளிர் போலீசில் புகார் அளிக்கப்பட்டு போக்சோ வழக்கு பதிவுசெய்யப்படுகிறது. கிராமங்கள், பள்ளிகள், மகளிர் குழுக்கள் மூலம்குழந்தை திருமணம் குறித்து விழிப்புணர்வு நடந்து வருகிறது என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ