காரைக்குடி நபர் ‛டிஜிட்டல் அரஸ்ட் ரூ.19 லட்சம் பெற்று மோசடி சைபர் கிரைம் போலீஸ் விசாரணை
சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் காரைக்குடி நபரிடம் 'வாட்ஸ் ஆப்' அழைப்பில் சி.பி.ஐ., அதிகாரிகள் போல் பேசி, ரூ.19 லட்சம் பெற்று மோசடி செய்தவர்கள் குறித்து சிவகங்கை சைபர் கிரைம் போலீசார் விசாரிக்கின்றனர். காரைக்குடியில் அச்சகம் நடத்துபவர் அண்ணாமலை 50. அக்., 14ம் தேதி இவரது அலைபேசிக்கு 'வாட்ஸ் ஆப்' அழைப்பில் பேசியுள்ளனர். அவர்கள் தங்களை மும்பை சி.பி.ஐ., அதிகாரிகள் எனக்கூறி, உங்கள் வங்கி கணக்கில் கணக்கில் வராத பணம் இருப்பதாக கூறியுள்ளனர். அடுத்த முறை பேசியவர் தன்னை சி.பி.ஐ., அதிகாரி தயாநாயக் என அறிமுகம் செய்து, உங்கள் மீது சட்டவிரோத பண பரிமாற்ற' வழக்கு பதிந்து, 'டிஜிட்டல் அரஸ்ட்' செய்துள்ளதாக கூறி, 6 நாட்கள் வரை வீட்டிலேயே தனியாக இருக்க செய்துள்ளனர். அடிக்கடி சி.பி.ஐ., அதிகாரிகள் போல் பேசி அவரது வங்கி கணக்கில் இருப்பில் உள்ள பணம் குறித்த விபரத்தை அறிந்த நிலையில், வழக்கில் இருந்து விடுவிக்க ரூ.19 லட்சத்தை மும்பையில் உள்ள தேசிய வங்கி கணக்கு ஒன்றில் செலுத்த கூறியுள்ளனர். இதை நம்பிய அவர் காரைக்குடியில் அவர் கணக்கு வைத்துள்ள வங்கிக்கு சென்று அவர்கள் தெரிவித்த வங்கி கணக்கிற்கு ரூ.19 லட்சத்தை போட்டுள்ளார். இது குறித்து விசாரித்து மோசடி என அறிந்ததும் சிவகங்கை சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் சாந்தகுமாரி விசாரிக்கிறார்.