கடனை திருப்பி கொடுக்காதவர் கடத்தல்: 3 பேர் கைது
காரைக்குடி: காரைக்குடி சுப்பிரமணியபுரத்தில் சேக் தாவூத் 36 என்பவர் கடை நடத்தி வருகிறார். இவரது கடையில், முதுகுளத்துார் உலையூரைச் சேர்ந்த ரங்கநாதன் மகன் குமார் 40 என்பவர் வேலை செய்து வந்தார். கடந்த சில வருடங்களுக்கு முன்பு மானாமதுரையில் கடை நடத்துவதாக கூறி மானாமதுரை காட்டுஉடைகுளத்தை சேர்ந்த முனீஸ்வரன் என்பவரிடம் ரூ.5.30 லட்சம் கடன் வாங்கியுள்ளார். வாங்கிய கடனை திருப்பி கொடுக்காமல் குமார் காரைக்குடிக்கு வந்துவிட்டார். பல ஆண்டுகளாக, குமாரை தொடர்பு கொள்ள முடியாத ஆத்திரத்தில் இருந்த முனீஸ்வரனுக்கு காரைக்குடியில் குமார் வேலை செய்தது தெரியவந்தது. மேலப்பிடாவூரை சேர்ந்த அரவிந்த்குமார் 27, அபிமன்யு 22 ஆகியோருடன் காரைக்குடி வந்துள்ளார். கடையில் இருந்த குமாரை தாக்கி காரில் கடத்திச் சென்று கண்டனூர் சாலை அருகே வைத்து மிரட்டியுள்ளனர். அவ்வழியாக வந்த போலீசார் மூவரையும் விசாரித்த போது, குமாரை கடத்தி மிரட்டியது தெரிய வந்தது. கடை உரிமையாளர் ஷேக் தாவூத் புகாரின் பேரில் காரைக்குடி போலீசார், முனீஸ்வரன், அரவிந்த் குமார், அபிமன்யு மூவரையும் கைது செய்தனர்.