குறைந்த மின்னழுத்தம் பொதுமக்கள் அவதி
சிவகங்கை: சிவகங்கை அருகே பனங்காடி ரோட்டில் மலர் நகர், மருதி நகரில் குறைந்த மின்னழுத்த மின்சாரத்தால் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர்.பனங்காடி ரோட்டில் உள்ள மலர் நகர், மருதி நகர், முல்லை நகர் பகுதியில் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கடந்த 3 நாட்களாக குறைவான மின்னழுத்த மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. வீடுகளில் உள்ள எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக் பொருட்கள் அடிக்கடி பழுதாகின்றன. காலை, மாலை நேரங்களில் போர்வெல்லில் மின்மோட்டாரை பயன்படுத்தி தண்ணீர் எடுக்க முடியவில்லை. இரவு நேரங்களில் வீடுகளில் உள்ள மின்விசிறிகள், மின் விளக்குகள் சரியாக இயங்குவதில்லை, ஏசி உள்ளிட்ட குளிர்சாதன வசதிகளை இயக்க முடிவதில்லை. மின்வாரிய துறையினர் இந்த பகுதியில் சீரான மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.