உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / மடப்புரம் அஜித்குமார் கொலை வழக்கு மளிகை கடையில்  சி.பி.ஐ., விசாரணை

மடப்புரம் அஜித்குமார் கொலை வழக்கு மளிகை கடையில்  சி.பி.ஐ., விசாரணை

திருப்புவனம்:அஜித்குமார் கொலை வழக்கு தொடர்பாக சி.பி.ஐ., அதிகாரிகள் நேற்று மடப்புரத்தில் மிளகாய் பொடி வாங்கிய மளிகை கடையில் விசாரணை நடத்தினர். அஜித்குமார் கொலை வழக்கு தொடர்பாக தனிப்படையைச் சேர்ந்த போலீஸ்காரர்களான கண்ணன்,ராஜா, பிரபு, ஆனந்த், சங்கரமணிகண்டன் ஆகியோர் கைது செய்யப்பட்டு மதுரை சிறையில் அடைக்கப்பட்டனர். ஜூலை 12 முதல் சி.பி.ஐ., டி.எஸ்.பி., மோஹித்குமார் தலைமையிலான அதிகாரிகள் குழு விசாரணை நடத்தி வருகின்றனர். சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஐந்து பேரையும் ஆக.5, 6 ஆகிய தேதிகளில் காவலுக்கு எடுத்து விசாரணை நடத்தினர். இதில் அஜித்குமாரை துன்புறுத்திய விதம் குறித்து போலீசார் தெரிவித்துள்ளனர். புகாரில் மிளகாய் பொடியை துாவி சித்ரவதை செய்ததாக அஜித்குமார் தரப்பில் குற்றம் சாட்டியிருந்தனர். மிளகாய் பொடி எங்கு வாங்கினர் என சி.பி.ஐ.,அதிகாரிகள் கேட்ட போது மடப்புரத்தில் உள்ள கடையில் வாங்கியதாக தெரிவித்துள்ளனர். நேற்று அந்த கடைக்கு சென்று சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரணை செய்த போது ஒரு மிளகாய் பொடி பாக்கெட்டும் இரண்டு தண்ணீர் பாட்டிலும் போலீசார் வாங்கி சென்றதாக தெரிவித்துள்ளார். அஜித்குமாரை தாக்கியதை வீடியோ எடுத்த சக்தீஸ்வரன், அஜித்குமார் தரப்பு வழக்கறிஞர் கார்த்திகைராஜா ஆகியோரை அழைத்து கொண்டு வடகரை மாணவர்கள் விடுதி அருகே உள்ள இடம், மளிகை கடை, நான்கு வழிச் சாலையில் தவலைக்குளம் கண்மாய், தட்டான்குளம் உணவகம் ஆகிய இடங்களில் விசாரணை நடத்தினர். காரை பார்க்கிங்கில் எடுத்து வந்து கொடுத்த தினகரன் அதன்பின் நண்பர் பாரி என்பவருடன் மது அருந்தியுள்ளார். அப்போது தினகரன் நகை திருட்டு குறித்து எதுவும் தெரிவித்தாரா என நேற்று சி.பி.ஐ., அதிகாரிகள் பாரியை அழைத்து விசாரித்துள்ளனர். ஆகஸ்ட் 20ம் தேதிக்குள் அஜித்குமார் கொலை சம்பந்தமான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்பதால் சி.பி.ஐ., அதிகாரிகள் ஆவணங்கள் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை