மானாமதுரையில் மழை வேண்டி எல்லை தெய்வத்திற்கு அசைவ படையல்
மானாமதுரை: மானாமதுரையில் மழை வேண்டி எல்லை தெய்வத்திற்கு அசைவ உணவு படையலை வைத்து கிருஷ்ணராஜபுரம் கிராமத்தினர் வழிபட்டனர். மானாமதுரை அண்ணாதுரை சிலை அருகே மானாமதுரையின் எல்லை தெய்வமாக எல்லைப்பிடாரி அம்மன் கோயில் உள்ளது. புரட்டாசியில் செவ்வாய் சாட்டுதல் விழா 50 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வருகிறது. இந்தாண்டு மானாமதுரை கிருஷ்ணராஜபுரம் கிராம மக்கள் ஒரு வாரத்திற்கு முன்பு காப்புக்கட்டி விரதம் இருந்தனர். நேற்று முன்தினம் இரவு நல்ல மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டியும், உலக நன்மைக்காக பனியாரம், கொழுக்கட்டை மற்றும் கறிச்சோறு, நாட்டுக்கோழி, கருவாடு, ஆட்டுக்கறி, முட்டை, மீன் உள்ளிட்ட அசைவ உணவுகளை தங்களது வீடுகளில் தயாரித்து புது மண்சட்டியில் தீப்பந்த விளக்கு ஏற்றி கிருஷ்ணராஜபுரம் மக்கள் மானாமதுரை பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள குறத்தி அம்மன் கோயிலிலிருந்து ஊர்வலமாக எல்லை பிடாரி அம்மன் கோயிலுக்கு வந்து படைத்து வழிபட்டனர்.