தேவகோட்டை மருத்துவமனை ரோட்டில் ஆக்கிரமிப்பு அதிகரிப்பு
தேவகோட்டை: தேவகோட்டை அரசு மருத்துவமனை ரோட்டில் ஆக்கிரமிப்பால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் சப் - கலெக்டர் தனி கவனம் செலுத்த வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர். தேவகோட்டை அரசு தலைமை மருத்துவமனை ரோட்டில் அரசு அலுவலகங்கள், மாணவர்கள் விடுதி, பள்ளிகள் உள்ளன. திருச்சி - ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலை புறவழிச் சாலையை இணைக்கும் ரோடு என்பதால் வாகன போக்குவரத்து அதிகரிக்கின்றன. இந்த ரோட்டில் ஆக்கிரமிப்புகளும் அதிகரித்து வருகின்றன. இரு வேளையும் பள்ளி, நூற்பாலை வாகனங்கள் அதிகம் சென்று வருகின்றன. வாகனங்கள் வரும் போது பள்ளி செல்லும் மாணவ மாணவியர் ஆக்கிரமிப்பு காரணமாக குறுகிய ரோட்டில் சிரமம் அடைகின்றனர். இந்த ரோடு வழியாக தேவகோட்டை பஸ் ஸ்டாண்டில் இருந்து கல்லூரி வழியாக கிராமங்களுக்கு அரசு டவுன் பஸ் செல்கிறது. பஸ்கள் மருத்துவமனை அருகே திரும்பமுடியாமல் திணறுகின்றன. தேவகோட்டை டி.எஸ்.பி., கவுதம் பஸ் ஸ்டாண்ட் அருகே மெயின் ரோட்டில் ஆக்கிரமிப்புகளை அகற்றினார். மற்ற பகுதியிலும் ரோட்டோர ஆக்கிரமிப்பு அகற்றப்படும் என்றனர். ஆனால், இன்று வரை அத்திட்டம் நிறைவேற்றப்படவில்லை. வெள்ளையன் ஊரணி, சிலம்பணி சன்னதி வீதி, மருத்துவமனை ரோட்டில் ஆக்கிரமிப்புகள் அதிகரித்து வருகின்றன. எனவே இவ்விஷயத்தில் சப் ----கலெக்டர் ஆயுஸ் வெங்கட் வத்ஸ், தனி கவனம் செலுத்தி நகரில் ரோட்டோர ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.