பழிக்குப்பழி கொலை செய்ய திட்டம் தப்பிய நால்வரில் ஒருவர் கைது
மானாமதுரை:மானாமதுரை அருகே பழிக்கு பழியாக ஜாமினில் வெளியே வந்தவர்களை கொலை செய்ய ஆயுதங்களுடன் திட்டம் தீட்டிய ஒருவரை போலீசார் கைது செய்தனர். 3 பேரை தேடி வருகின்றனர்.மானாமதுரை அருகே ஆயுதங்களுடன் சுற்றிய 4 பேரை மானாமதுரை தனிப்படை போலீசார் பிடிக்க முயன்றனர். சிவகங்கை காளவாசல் பகுதியை சேர்ந்த ராஜபாண்டி 19, என்பவர் மட்டும் பிடிபட்டார். மற்ற 3 பேர் தப்பினர்.இச்சம்பவம் குறித்து போலீசார் கூறியதாவது: கடந்த ஆண்டு செப்டம்பர் கீழப்பசலை கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை சங்கமங்கலம் கிராம பகுதியை சேர்ந்த 6 பேர் முன் விரோதம் காரணமாக வெட்டி கொலை செய்தனர்.இந்த வழக்கில் 6 பேர் கைது செய்யப்பட்டு தற்போது 3 பேர் ஜாமினில் வெளியே வந்த நிலையில் இவர்களை பழிக்கு பழி கொலை செய்வதற்காக பலியான இளைஞரின் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் 4 பேர் ஆயுதங்களுடன் சுற்றி திரிவதாக தகவல் வந்ததை தொடர்ந்து அவர்களை கண்காணித்து பிடிக்க முற்பட்டபோது 4 பேரும் தப்பினர். இதில் ராஜபாண்டி மட்டும் பிடிபட்டார் என்றனர்.