இளையான்குடியில் பா.ஜ., ஊர்வலத்திற்கு எதிர்ப்பு
இளையான்குடி : இளையான்குடியில் ஆப்பரேஷன் சிந்துார் வெற்றியை கொண்டாடும் விதத்தில் தேசிய கொடியுடன் ஊர்வலம் செல்ல முயன்ற பா.ஜ.,வினரை தடுத்ததால் பதட்டம் ஏற்பட்டது.ஆப்பரேஷன் சிந்துார் வெற்றியை கொண்டாடும் விதத்தில் பல இடங்களில் பா.ஜ., வினர் தேசியக் கொடியுடன் ஊர்வலம் செல்கின்றனர்.இளையான்குடியில் பா.ஜ., நிர்வாகிகள் ராஜ பிரதீப், சிலம்பரசன், பூபாலன், பாலமுருகன், சங்கரசுப்பிரமணியன் தலைமையில் 100க்கும் மேற்பட்டோர் போலீசில் அனுமதி பெற்று ஊர்வலமாக செல்ல முயன்றனர்.மெயின் பஜாருக்குள் கொடியுடன் ஊர்வலமாக வரக்கூடாது என சிலர் வாக்குவாதம் செய்தனர். இதனால் பதட்டம் ஏற்பட்டதை தொடர்ந்து போலீசார் பா.ஜ., வினரை மெயின் பஜாருக்குள் வராமல் பேரூராட்சி அலுவலகம் வரை ஊர்வலமாக செல்ல அனுமதித்தனர்.பா.ஜ., நிர்வாகிகள் கூறியதாவது: இளையான்குடியில் முஸ்லிம்கள் அதிகம் வசிப்பதால் தேசிய கொடி ஊர்வலத்தை கூட அனுமதிக்க மறுக்கின்றனர். கடந்த மாதம் பா.ஜ., தேசிய செயற்குழு உறுப்பினர் எச். ராஜா இளையான்குடி வழியாக பரமக்குடி செல்வதை தடுத்தனர். போலீசாரும் அதற்கு துணையாக இருந்து அவரை மாற்று பாதையில் செல்ல வலியுறுத்தினர்.கடந்த வருடம் இளையான்குடி கண்மாய் கரை பஜாரில் உள்ள ஒரு டீக்கடையில் பா.ஜ., சிறுபான்மை பிரிவு தலைவர் வேலுார் இப்ராஹிம் டீ அருந்தி கொண்டிருந்தபோது அங்கு வந்த சிலர் அவரது காரை அடித்து நொறுக்கினர். தற்போது தேசிய கொடியுடன் ஊர்வலம் செல்வதற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர் என்றனர்.