சங்கராபுரத்தில் கிளை நுாலகம் அவசியம் புரவலர்கள் எதிர்பார்ப்பு
காரைக்குடி: காரைக்குடி சங்கராபுரத்தில் செயல்பட்டு வரும் ஊர்ப்புற நூலகத்தை கிளை நூலகமாக தரம் உயர்த்த வேண்டும் என்று கோரிக்கை எழுந்து வருகிறது.காரைக்குடி அருகே சங்கராபுரம் என்.ஜி.ஓ., காலனியில் ஊர்ப்புற நூலகம் செயல்பட்டு வருகிறது. காரைக்குடி மாநகரத்தில் வளர்ந்து வரும் முக்கிய பகுதியாக இருப்பதால் ஏராளமான வாசகர்கள் நூலகம் வந்து செல்கின்றனர். 50க்கும் மேற்பட்ட புரவலர்கள் உள்ளனர். கடந்த பல ஆண்டுகளாக, ஊர்ப்புற நூலகத்தை கிளை நூலகமாக தரம் உயர்த்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தும், அரசு இதை செயல்படுத்தவில்லை என புகார் எழுந்துள்ளது.இது குறித்து காரைக்குடி ஆதிஜெகநாதன் கூறியதாவது, கிளை நூலகமாக தரம் உயர்த்துமாறு நீதிமன்றம் மூலம் அனுமதி பெற்று வந்தோம். ஆனால், இன்று வரை கிளை நுாலகமாக தரம் உயர்த்தப்படாமல், இடவசதியின்றி வாசகர்கள், புரவலர்கள் தவித்து வருகின்றனர் என்றார்.