தெப்பக்குளத்தில் பிளாஸ்டிக் கழிவு அகற்றம் குப்பை கொட்டுவோர் மீது நடவடிக்கை
சிவகங்கை: சிவகங்கை தெப்பகுளத்தில் மிதந்த பிளாஸ்டிக் குப்பையை நீண்ட நாட்களுக்கு பிறகு நேற்று நகராட்சி ஊழியர்கள் அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.சிவகங்கை நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள தெப்பகுளம் நகராட்சி கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த தெப்பகுளத்திற்கு மழைநீர் செல்ல வரத்து கால்வாய் அமைக்கப்பட்டுள்ளன. அவை பல ஆண்டுகளாக துார் வாரப்படாததால் அடைபட்டுள்ளன. தெப்பக்குளத்தின் வடக்கு பகுதியில் உள்ள வரத்து கால்வாயில் வணிக நிறுவனங்கள் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் கலக்கிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. அதேபோல் அந்த பகுதி மக்கள், வணிக நிறுவனங்கள் தாங்கள் பயன்படுத்திய குப்பைகளை தெப்பகுளத்திற்கு வரக்கூடிய வரத்துகால்வாயில் கொட்டுகின்றனர். மழைபெய்தால் இந்தகுப்பை அனைத்தும் தெப்பக்குளத்திற்கு தண்ணீரில் வந்து மிதக்கிறது. தெப்பகுள நீர் மாசுபடுகிறது. வரத்துக் கால்வாயில் கழிவு நீர் திறந்து விடுபவர்கள் மீது நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். துாய்மை பணியை நகராட்சி தலைவர் துரைஆனந்த, கமிஷனர் கிருஷ்ணாராம் ஆய்வு செய்தனர்.