திருப்புவனத்தில் போஸ்டரால் போலீசாருக்கு தலைவலி
திருப்புவனம் : திருப்புவனத்தில் பரபரப்புக்காக பலரும் பிரச்னைக்குரிய வாசகங்களுடன் போஸ்டர் ஒட்டுவதால் போலீசாருக்கு தலைவலி ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் எந்த விசேஷம் என்றாலும் அதற்கு போஸ்டர் ஒட்டி சுவரை அசிங்கப்படுத்துவது பலருக்கு கை வந்த கலை. தேர்தல் காலத்தில் போஸ்டர்களுக்கு கட்டுப்பாடு விதிப்பதால் ஓரளவிற்கு பொது மற்றும் தனியார் சுவர்கள் தப்பின. திருமணம், காதணி விழா உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு ஜாதி மற்றும் மத தலைவர்கள் படத்துடன் பரபரப்பை ஏற்படுத்தும் பிளக்ஸ் அச்சடித்து பொது இடங்களில் வைக்க ஆரம்பித்தனர். எதிர் தரப்பினர் அதனை சேதப்படுத்த சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டன. இதனையடுத்து போலீசார் சர்ச்சைக்குரிய வாசகங்களை அச்சிட்டால் பிளக்ஸ் போர்டு வைப்பவர், அதனை டிசைன் செய்த ஸ்டுடியோ உரிமையாளர்கள், அச்சிட்ட நிறுவனம் ஆகியோர் மீது வழக்கு பதிந்து நடவடிக்கை எடுத்ததை அடுத்து அதுவும் குறைந்து விட்டது.தற்போது போஸ்டரில் சர்ச்சைக்குரிய வாசகம் அச்சிட தொடங்கியுள்ளனர். திருப்புவனத்தில் நிறுவனம் ஒன்று திருப்புவனத்தில் சம்பவம் விரைவில் என்ற பெயரில் சிவப்பு எழுத்துக்களுடன் போஸ்டர் ஒட்ட பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து போலீசார் சம்பந்தப்பட்டவர்களை வரவழைத்து சம்பவம் என்ற எழுத்தை மறைக்க உத்தரவிட்டதையடுத்து அதனை மறைத்தனர். இதுபோல தொடர்ச்சியாக சர்ச்சைக்குரிய வகையில் போஸ்டர் ஒட்டுவது,எழுதுவது போன்றவற்றை நிரந்தரமாக தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏற்கனவே போலீசார் பற்றாக்குறை காரணமாக ரோந்து பணி உள்ளிட்டவை மேற்கொள்ள முடியாமல் போலீசார் தவிக்கும் நிலையில் பரபரப்பிற்காக போஸ்டர் ஒட்டுவது போலீசாருக்கு தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.