ராமேஸ்வரம் - கன்னியாகுமரி ரயிலை தினமும் இயக்க கோரிக்கை
மானாமதுரை: ராமேஸ்வரத்திலிருந்து மானாமதுரை வழியாக கன்னியாகுமரிக்கு வாரத்தில் 3 நாட்கள் இயக்கப்படும் ரயிலை தினமும் இயக்க வேண்டுமென்று பயணிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.ராமேஸ்வரத்தில் இருந்து கன்னியாகுமரிக்கும், கன்னியாகுமரியில் இருந்து ராமேஸ்வரத்திற்கும் வாரத்திற்கு 3 நாட்கள் எக்ஸ்பிரஸ் ரயில் மானாமதுரை வழியாக இயக்கப்படுகிறது.இந்த ரயில் கன்னியாகுமரியில் இருந்து ராமேஸ்வரத்திற்கு ஞாயிறு, செவ்வாய், வியாழன், இதே போல் ராமேஸ்வரத்தில் இருந்து திங்கள், புதன், சனிக்கிழமை கன்னியாகுமரிக்கு இயக்கப்படுகிறது.தற்போது பாம்பன் பால பணிகள் முடிவடைந்து ராமேஸ்வரத்திற்கு அனைத்து ரயில்களும் இயக்கப்படுவதை தொடர்ந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வெளி மாநிலங்களில் இருந்து அதிகளவில் ராமேஸ்வரம், கன்னியாகுமரிக்கு வந்து செல்கின்றனர். வாரத்திற்கு 3 நாட்கள் மட்டுமே இந்த ரயில் இயக்கப்படும் நிலையில் முன்பதிவு துவங்கிய சில நிமிடங்களிலேயே முடிந்து விடுவதால் பயணிகள் சிரமப்பட்டு வருகின்றனர். மதுரை கோட்ட ரயில்வே நிர்வாகம் இந்த ரயிலை இரு மார்க்கங்களிலும் தினசரி ரயிலாக இயக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.