ஆடு மேய்த்த சிறுவன் மீட்பு
காரைக்குடி: கல்லல் அருகே ஆட்டு மந்தையில் 12 வயது சிறுவனை வேலைக்கு அமர்த்தி இருப்பதாக தேவகோட்டை சப் கலெக்டருக்கு தகவல் கிடைத்தது. சிவகங்கை மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையாளர் முத்து தலைமையிலான குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். இளையான்குடி அருகே உள்ள பெரும் பச்சேரியைச் சேர்ந்த காரி 58 என்பவர், பட்டுக்கோட்டை தாலுகா பெரியகத்தி கோட்டையைச் சேர்ந்த 12 வயது சிறுவனை ஆடு மேய்க்கும் தொழிலில் ஈடுபடுத்தியது தெரியவந்தது. தொழிலாளர் உதவி ஆய்வாளர் ஆறுமுகம் புகாரின் பேரில் காரி மீது கல்லல் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். சிறுவனை மீட்டு மாவட்ட குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.