திருக்கோஷ்டியூரில் நிழற்கூடம்
திருக்கோஷ்டியூர்: திருக்கோஷ்டியூரில் பக்தர்கள் வசதிக்காக சவுமியநாராயணப்பெருமாள் கோயில் அருகில் நிழற் கூடம் அமைக்கும் பணி துவங்கியுள்ளது.சிவகங்கை சமஸ்தானத்தைச் சேர்ந்த இக்கோயில் 108 வைணவத்தலங்களில் ஒன்று. இக்கோயிலுக்கு தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்தும் பக்தர்கள் வருகின்றனர். இவர்கள் காத்திருக்க இப்பகுதியில் போதிய வசதியின்றி தவிக்கின்றனர். இதனையடுத்து சமஸ்தானம் சார்பில் காத்திருக்க நீண்ட நிழற் கூடம் அமைக்க உள்ளனர்.நிழற்கூடாரத்தை கோவை ராமநாதபுரம் ஆர்எஸ்.மாருதி என்பவர் உபயதாரராக அமைக்கிறார். மேலும் உபயதாரர்கள் உதவியுடன் தரை தளத்தில் கற்கள் பதிக்கவும், பக்தர்கள் அமர கிரானைட் இருக்கைகள் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது கூடம் அமைக்கும் பணி துவங்கியுள்ளது.