டாக்டர்கள் பற்றாக்குறை
மானாமதுரை: தினமலர் செய்தி எதிரொலியாக மானாமதுரை அரசு மருத்துவமனையை எம்.எல்.ஏ., தமிழரசி ஆய்வு செய்து டாக்டர்கள் காலியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.மானாமதுரை அரசு மருத்துவமனையில் தினந்தோறும் 400க்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சைக்காக வருகின்றனர். 50க்கும் மேற்பட்டவர்கள் உள் நோயாளிகளாக சிகிச்சை பெற்று வரும் நிலையில் மகப்பேறு,எலும்பு முறிவு, குழந்தைகள் நல டாக்டர்கள் என 10க்கும் மேற்பட்ட டாக்டர்கள் பணியிடம் மற்றும் ஊழியர் பணியிடங்கள் காலியாக உள்ளது.சிகிச்சை பெற முடியாமல் நோயாளிகள் அவதிக்குள்ளாகி வருவதாக கடந்த 23ம் தேதி தினமலர்நாளிதழில் செய்தி வெளியானது. இதனைத் தொடர்ந்து நேற்று எம்.எல்.ஏ., தமிழரசி மருத்துவமனையில் ஆய்வு செய்து டாக்டர்கள் மற்றும் ஊழியர்கள் பணியிடம் காலியாக இருப்பது குறித்து தலைமை மருத்துவ அலுவலரிடம் கேட்டறிந்தார்.மருத்துவமனைக்கு தேவையான வசதிகள் குறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சரிடம் கோரிக்கை வைத்து மானாமதுரை அரசு மருத்துவமனைக்கு தேவையான டாக்டர்கள் மற்றும் ஊழியர்கள் நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.