முதல்வர் கோப்பை மாநில பாட்மின்டன் வெண்கலம் பெற்ற சிவகங்கை ஆசிரியர்கள்
சிவகங்கை: முதல்வர் கோப்பை இரட்டையர் பாட்மின்டன் போட்டியில் சிவகங்கையை சேர்ந்த ஆசிரியர்கள் மாநில அளவில் மூன்றாம் இடம் பிடித்து வெண்கல பதக்கம் பெற்றனர். முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிகள் பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவிகள், பொது மக்கள், அரசு ஊழியர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கென தனித்தனியாக போட்டிகள் நடத்தப் பட்டன. இதில், மாவட்ட அளவில் அரசு ஊழியருக்கான இரட்டையர் பாட்மின்டன் போட்டியில் இடைக்காட்டூர் அரசு மேல்நிலை பள்ளி ஆசிரியர் பி.சாத்தையா, இளையான்குடி புதுார் ஹாஜி கே.கே., இப்ராகிம் அலி மேல்நிலைபள்ளி ஆசிரியர் எஸ்.மகேஷ் வரன் முதலிடம் பிடித்து மாநில அளவிலான போட்டிக்கு தேர்வாகினர். அதே போன்று ஒற்றையர் பாட்மின்டனிலும் ஆசிரியர் எஸ்.மகேஷ் வரன் மாவட்ட முதலிடம் பிடித்து மாநில போட்டிக்கு தகுதி பெற்றார். இருவரும் ஒற்றையர், இரட்டையர் பிரிவில் மாநில அளவில் விளையாடி மூன்றாம் இடம் பிடித்து, வெண்கல பதக்கம் பெற்றனர். இரட்டையர் பிரிவில் இருவருக்கும் தலா ரூ.25 ஆயிரம் பரிசு தொகை, பதக்கம், சான்று வழங்கப்பட்டது. அதே போன்று ஒற்றையர் பாட்மின்டனில் வெண்கல பதக்கம் பெற்ற ஆசிரியர் மகேஷ்வரன் ரூ.50,000 பரிசு தொகை, பதக்கம், சான்றுகளை பெற்றார்.