விடுதியில் மாணவர்கள் மோதல் 2 பேர் காயம்: ஒருவர் கைது
காரைக்குடி:சிவகங்கை மாவட்டம் காரைக்குடி மாணவர் விடுதிகளில் இரவுக் காவலர் இல்லாததால் மாணவர்களிடையே மோதல் போக்கு அதிகரித்து வருகிறது.மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் 26 மாணவர் விடுதிகள், 16 மாணவியர் விடுதிகள் செயல்படுகின்றன. ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் மாணவர்களுக்கு 28 விடுதிகள், மாணவிகளுக்கு 14 விடுதிகள் உள்ளன. பெரும்பாலான விடுதிகளில் இரவு காவலர் பணியிடங்கள் இல்லை. இரவுக் காவலர் இல்லாத சில விடுதிகளில் இரவில் பல்வேறு சமூக விரோத செயல் நடப்பதுடன் மாணவர்களின் பாதுகாப்பும் கேள்விக்குறியாகி உள்ளதாக பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர்.காரைக்குடி பருப்பூரணியில் உள்ள அரசு சீர்மரபினர் மாணவர் விடுதியில் நேற்று முன் தினம் இரவு மாணவர்களிடையே மோதல் ஏற்பட்டது. இதில் மாணவர்கள் இளம்பருதி, ராஜபாண்டி காயமுற்றனர். காப்பாளர் கண்ணன் புகாரின்படி ஆயுதம் வைத்திருந்த மேலுாரைச் சேர்ந்த மாணவர் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.