கழிப்பறை இல்லாமல் ஆசிரியர்கள் அவதி
சிங்கம்புணரி: சிங்கம்புணரி ஒன்றியத்தில் மதுராபுரி ஊராட்சி வேங்கைப்பட்டி அரசு நடுநிலைப்பள்ளிக்கு 6 வகுப்பறை, இரண்டு தளங்களுடன் ஒரு கோடி ரூபாய் மதிப்பில் புதிய கட்டடம் கட்டப்பட்டது. இக்கட்டடம் அருகே ஆசிரியர்கள், மாணவர்களுக்காக கழிப்பறையும் புதிதாக கட்டப்பட்டது. ஆனால் கழிப்பறை கட்டப்பட்ட இடம் தனியாருக்கு சொந்தமானது என்று புகார் கூறப்பட்டதால், கட்டுமானம் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. இதனால் ஆசிரியர்களும் மாணவர்களும் சில மீட்டர் தூரத்தில் உள்ள பழைய பள்ளி கட்டடத்தில் இயங்கும் பழுதடைந்த கழிப்பறைகளையே பயன்படுத்தி வருகின்றனர். அது பாதுகாப்பற்ற முறையில் துர்நாற்றம் வீசக்கூடியதாக இருப்பதால் ஆசிரியர்களும், மாணவர்களும் அவதிப்படுகின்றனர். மாணவர்களுக்கு நோய் தொற்று ஏற்பட வாய்ப்புஉள்ளது. எனவே புதிய கட்டடம் அருகே அரசுக்கு சொந்தமான இடத்தில் கழிப்பறை கட்ட ஆசிரியர்கள் வலியுறுத்தியுள்ளனர்.