உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை /  கொள்ளையடித்த பணத்தில் அச்சகம் துவங்கியவர் சிக்கினார்

 கொள்ளையடித்த பணத்தில் அச்சகம் துவங்கியவர் சிக்கினார்

சிவகாசி: சிவகாசியில் தனியார் பள்ளி தாளாளர் வீட்டில் திருடிய வழக்கில் கைதான இருவர், 2018 முதல் பல்வேறு இடங்களில் திருடி, அதன் மூலம் கிடைத்த பணத்தில் அச்சகம் நடத்தியது தெரிய வந்துள்ளது. அவர்களிடமிருந்து, 70 சவரன் நகையை போலீசார் மீட்டனர். விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே திருப்பதி நகரில் வசிப்பவர் அய்யாவு மெட்ரிக் பள்ளி தாளாளர் செல்லபாண்டியன், 63. இவர், குடும்பத்துடன் சென்னை சென்ற நிலையில், டிச., 8ல் வீட்டின் ஜன்னல் கம்பியை அறுத்து உள்ளே சென்ற திருடர்கள் நகை, பணம் இல்லாததால் வெறுங்கையுடன் திரும்பினர். போலீசார் அப்பகுதி கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். இதில் ஈடுபட்டதாக, சிவகாசி அருகே நமஸ்காரித்தான்பட்டியைச் சேர்ந்த தங்கேஸ்வரன், 35, திருத்தங்கலை சேர்ந்த செல்வகுமார், 32, ஆகியோரை போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்து 70 சவரன் நகையை மீட்டனர். தங்கேஸ்வரன், 2011 -- 2016 கேரளாவில் கூலி வேலை செய்தார். அங்கு பல்வேறு திருட்டுகளில் ஈடுபட்டுள்ளார். பின், சிவகாசியில் அச்சகத்தில் வேலை பார்த்தார். அங்கு வேலை பார்த்த செல்வகுமாருடன் சேர்ந்து 2018 முதல் திருட்டுகளில் ஈடுபட்டுள்ளார். திருடப்பட்ட நகையை விற்பனை செய்து, அதன் மூலம் கிடைத்த பணத்தில் இருவரும், 2022ல் சிவகாசியில், 'டூ கேண்ட்ஸ்' என்ற பெயரில் சொந்தமாக அச்சகம் துவங்கினர். இவர்கள், பகலில் அச்சக வேலையிலும், இரவில் கொள்ளையிலும் ஈடுபட்டதாக போலீசார் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ