உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / நாட்டரசன்கோட்டை, திருப்புவனத்தில் புதிய பஸ் ஸ்டாண்ட் கட்டும் திட்டம்   அரசியல் தலையீடின்றி இடம் தேர்வு அவசியம் 

நாட்டரசன்கோட்டை, திருப்புவனத்தில் புதிய பஸ் ஸ்டாண்ட் கட்டும் திட்டம்   அரசியல் தலையீடின்றி இடம் தேர்வு அவசியம் 

சிவகங்கை: புதிதாக அறிவித்துள்ள நாட்டரசன்கோட்டை, திருப்புவனம் பஸ் ஸ்டாண்ட் மக்களின் முழு பயன்பாட்டில் இருக்கும் விதத்தில் அமைக்க வேண்டும் என அரசை மக்கள் வலியுறுத்துகின்றனர்.தமிழக சட்டசபை மானிய கோரிக்கையில் சிவகங்கை மாவட்டம் நாட்டரசன்கோட்டை, திருப்புவனம் பேரூராட்சியில் புதிதாக பஸ் ஸ்டாண்ட் அமைக்கப்படும் என அறிவித்தனர். இவ்விரு பேரூராட்சியில் தலா 1 ஏக்கர் பரப்பளவில் ரூ.1 கோடி மதிப்பில் புதிய பஸ் ஸ்டாண்ட் கட்டப்படும் என தெரிவிக்கின்றனர். தமிழக அரசு, புதிய பஸ் ஸ்டாண்ட்டிற்கு அறிவிப்பு வெளியிட்டு, நிதி ஒதுக்கும் பட்சத்தில் அத்திட்டம் மக்களை முழுமையாக சென்று சேரும் விதத்தில், மக்கள் போக்குவரத்து அதிகமுள்ள பகுதியில் மட்டுமே புதிய பஸ் ஸ்டாண்ட் கட்ட வேண்டும் என அரசிடமும், சிவகங்கை கலெக்டர் ஆஷா அஜித்திடம் மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.இளையான்குடியில் 2 ஏக்கரில் ரூ.3.74 கோடியில் ஒரு ஆண்டிற்கு முன் கட்டி திறந்த பஸ் ஸ்டாண்டிற்குள் இது வரை எந்த பஸ்களும் சென்று வருவதில்லை. மாறாக பைபாஸ் ரோடு வழியாக பிற நகரங்களுக்கு சென்று விடுகிறது. இதனால் புதிதாக பஸ் ஸ்டாண்ட் கட்டியும் பயன் இன்றி வீணாகி கிடக்கிறது. அதேபோன்ற நிலைமை நாட்டரசன்கோட்டை, திருப்புவனத்தில் புதிதாக அமைக்க உள்ள பஸ் ஸ்டாண்ட்டிற்கு வரக்கூடாது.மக்கள் அதிகம் கூடும் இடங்களிலும், அனைத்து பஸ்களும் பஸ் ஸ்டாண்டிற்குள் வந்து செல்லும் விதமாக புதிய பஸ் ஸ்டாண்ட்களை இரு நகரங்களிலும் அமைக்க அரசும், கலெக்டர் ஆஷா அஜித்தும் கவனம் செலுத்த வேண்டும் என மக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர். புதிய பஸ் ஸ்டாண்டிற்கான இடம் தேர்வு விஷயத்தில் அனைத்து அம்சங்களுக்கும் ஏற்ற வகையிலான இடத்தை தேர்வு செய்வதில் அரசியல்வாதிகளின் தலையீடு இன்றி, கலெக்டர் தான் உறுதி செய்ய வேண்டும் என மக்கள் வலியுறுத்துகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !