திருக்கோஷ்டியூர் திருவாடிப்பூர உற்ஸவம் துவக்கம்
திருப்புத்துார்: திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப் பெருமாள் கோயில் திருவாடிப்பூர உற்ஸவம் கொடியேற்றத்துடன் துவங்கியது. ஜூலை28 ல் தேரோட்டம் நடைபெறும். இக்கோயிலில் உற்ஸவ துவக்கத்தை முன்னிட்டு இன்று காலை 8:00 மணிக்கு பெருமாள், ஆண்டாள் கல்யாண மண்டபத்தில் கொடிமரம் எதிரில் எழுந்தருளினர். காலை 10:30 மணிக்கு கொடிப்படமும், சக்கரத்தாழ்வாரும் திருவீதி வலம் வந்தனர். தொடர்ந்து காலை 11:20 மணிக்கு பட்டாச்சார்யார்களால் கொடிப்படத்திற்கும் உற்ஸவருக்கும் பூஜை நடந்து தீபாராதனை நடந்தன. பின்னர் கொடியேற்றம் நடந்தது.தொடர்ந்து கொடிமரத்திற்கு அபிேஷக, ஆராதனை நடந்தன.இரவில் ஆண்டாள், பெருமாள் திருவீதி வலம் வந்தனர்.இன்று முதல் தினசரி காலையில் திருவீதி புறப்பாடும், இரவில் வாகனங்களில் ஆண்டாள், பெருமாள் திருவீதி உலாவும் நடைபெறும்.ஜூலை 25ல் ஆண்டாள், பெருமாள் தங்கப்பல்லக்கில் எழுந்தருளி மாலையில் சூர்ணாபிேஷகம் நடைபெறும். ஆண்டாள் பிறந்த திருநட்சத்திரத்தில் ஜூலை28 ல் தேரோட்டம் நடைபெறும்.