அட்வான்ஸ் கொடுத்து வேலைக்கு அழைத்து வரப்படுபவர்கள் கொத்தடிமையா ஆடு வளர்ப்போர் குமுறல்
சிவகங்கை: முன் பணம் கொடுத்து ஆடு மேய்க்க அழைத்து வந்தவர்களை கொத்தடிமையாக நடத்துவதாக கூறி வழக்கு பதிவதை கண்டித்து சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தை மேய்ச்சல் நல கூட்டமைப்பினர் முற்றுகையிட்டனர். சிவகங்கை மாவட்டத்தில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் ஆடுகள் வளர்த்து, கிடை அமைத்து, தொழில் செய்து வருகின்றனர். ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்து செல்ல, மாத சம்பளத்தில் சிலர் பணிபுரிகின்றனர். குடும்ப செலவு, குழந்தைகளின் கல்வி செலவிற்காக ஆடு வைத்திருப்போர்களிடம் முன்பணம் பெறுகின்றனர். இந்நிலையில் சிவகங்கை மாவட்டத்தில் ஆடு மேய்க்கும் ஊழியர்களை, ஆடு வைத்திருப்பவர்கள் கொத்தடிமையாக நடத்துவதாக கூறி, வழக்கு தொடரப்படுகிறது. குறிப்பாக குழந்தைகள் இருந்தால், அதற்கு தனியாக வழக்கு பதிந்து, ஆடு வைத்திருப்போருக்கு நீதிமன்றம் மூலம் அதிகபட்சமாக அபராத தொகையும் விதிக்கப்படுகிறது. இது போன்ற செயலை கண்டித்தும், வழக்கு பதிவதை கைவிடக்கோரியும் நேற்று மேய்ச்சல் நல கூட்டமைப்பின் தலைவர் சி.ராஜிவ் காந்தி தலைமையில், ஆடுகளின் உரிமையாளர்கள் சிவகங்கை கலெக்டர் அலுவலகம் முன் ரோட்டில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். அவர்கள் கூறுகையில், வேலைக்கு ஆட்கள் கிடைப்பது சிரமமாக உள்ளது. எனவே அட்வான்ஸ் கொடுத்து தான் அழைத்து வருகிறோம். இப்படி அழைத்து வரப்பட்டவர்களை கொத்தடிமையாக வைத்திருப்பதாக கூறி வழக்கு தொடர்கின்றனர். இப்படி தொந்தரவு கொடுத்தால் எப்படி தொழில் செய்ய முடியும் என்றனர். கோட்டாட்சியர் விஜயகுமார், தாசில்தார் சிவராமன், டி.எஸ்.பி., அமல அட்வின், இன்ஸ்பெக்டர் அன்னராஜ் பேச்சு வார்த்தை நடத்தினர். பின்னர் கலெக்டர் பொற்கொடியிடம் மனு அளித்தனர். மனுதாரர்களிடம் கலெக்டர் கூறியதாவது: கொத்தடிமையாக தொழிலாளர்கள் இருப்பதாக புகார் வந்தால், எப்படி பொறுத்துக்கொள்ள முடியும். இருப்பினும் நீங்கள் வழங்கிய மனுவின் மீது உரிய விசாரணை செய்து, முடிவு எடுக்கப்படும் என்றார்.