ஒரே ஊராட்சியில் அருகருகே இரண்டு அங்கன்வாடி மையம்
காரைக்குடி: கல்லல் அருகே உள்ள கூத்தலுார் ஊராட்சியில் ஒரே இடத்தில் இரண்டு அங்கன்வாடி மையங்கள் செயல்பட்டு வருகிறது. கல்லல் ஒன்றியத்திற்கு உட்பட்ட கூத்தலுார் ஊராட்சியில் அனைத்திடல், இந்திரா காலனி, பிளார் உள்ளிட்ட சிற்றுார்கள் உள்ளன. இதில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் உள்ளனர். கூத்தலுாரில் அருகருகே, இரண்டு அங்கன்வாடி மையங்கள் செயல்படுகிறது. ஒரு அங்கன்வாடி மையத்தில் 20 குழந்தைகளுடன் சமையல் மற்றும் அங்கன்வாடி பணியாளர் உள்ளனர். மற்றொரு அங்கன்வாடி மையத்தில் 10 குழந்தைகளுக்கு ஒரே ஒரு பணியாளர் மட்டுமே உள்ளார். குழந்தைகளின் எண்ணிக்கை குறைவாக உள்ள இப்பகுதியில் அருகருகே 2 அங்கன்வாடி மையங்கள் செயல்படுகிறது. குழந்தைகள் எண்ணிக்கை குறைவாக உள்ள நிலையில் ஒரே இடத்தில் இரண்டு அங்கன்வாடி மையங்கள் செயல்படுவதால், அரசு நிதியும் வீணாகி வருகிறது. அதிகாரிகள் தெரிவிக்கையில்: குறைவான எண்ணிக்கையில் உள்ள அங்கன்வாடி மைய கட்டடம் முற்றிலும் பழுது என்ற கணக்கில் அனுப்பப்பட்டுள்ளது. கட்டடம் அகற்றப்பட்ட பின்பு அதே இடத்தில் செயல்படாது. வேறு பகுதிக்கு மாற்றப்பட்டு விடும்.