காலியாந்துாரில் கிடைத்த வலம்புரி விநாயகர் சிற்பம்
திருப்புவனம்: சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கலியாந்தூரில் 8ம் நூற்றாண்டை சேர்ந்த வலம்புரி விநாயகர் புடைப்புச்சிற்பம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. பிள்ளையார்பட்டி, செவல்பட்டி உள்ளிட்ட குடைவரை கோயில்களில் மட்டுமே வலம்புரி விநாயகர் சிலைகள் இரண்டு கரங்களுடன் இருக்கும். கலியாந்தூரில் கிடைத்த வலம்புரி விநாயகர் சிற்பமும் ஒரே பாறையில் புடைப்பு சிற்பமாக கிடைத்துள்ளது. அய்யனாரையே காவல் தெய்வமாக வழிபடுவது வழக்கம். ஆனால் கலியாந்தூரில் இந்த வலம்புரி விநாயகரை ஊர்காவலன் சாமியாக வழிபடுகின்றனர். இதுகுறித்து பேராசிரியர் மீனாட்சி சுந்தரம் கூறியதாவது: புடைப்பு சிற்பம் 2.5 அடி உயரமும், 2 அடி அகலமும் கொண்டுள்ளது. 8 அல்லது 9ஆம் நூற்றாண்டை சேர்ந்ததாக இருக்கும் என கருதப்படுகிறது. தரம் குறைந்த பாறையில் வடிக்கப்பட்டிருப்பதால் சிலை சேதமடைந்துள்ளது. தனிக்கல்லில் வடிக்கப்பட்ட சிற்பம் என்பதால் மிகச்சிறந்த சிற்பமாக காணப்படுகிறது என்றார்.