மடப்புரம் கோயிலில் சேலை ஏலம் போட்டி போட்டு எடுத்த பெண்கள்
திருப்புவனம்: மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் நேற்று ஏலத்தில் சேலை வாங்க ஏராளமான பெண்கள் வந்திருந்தனர். பிரசித்தி பெற்ற காளி கோயில்களில் ஒன்றான மடப்புரம் பத்ரகாளியம்மனை தரிசனம் செய்ய தினசரி ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். அம்மனுக்கு நேர்த்தி கடனாக பக்தர்கள் சேலை வாங்கி அணிவிப்பது வழக்கம். பக்தர்கள் வழங்கிய சேலைகளை வாரம்தோறும் வெள்ளி கிழமை கோயில் வளாகத்தில் அதிகாரிகள் ஏலம் விடுவார்கள். ரூபாய் 100 முதல் 500 வரை தொடங்கி சேலையின் மதிப்பிற்கு ஏற்ப ஆயிரக்கணக்கில் ஏலம் விடுவார்கள். பெண்கள் ஆர்வமுடன் சேலைகள் வாங்க வந்திருந்தனர். 300க்கும் மேற்பட்ட சேலைகள் நேற்று விற்பனை செய்யப்பட்டன. பக்தர்கள் கூறுகையில், திருநாள் அன்று அம்மன் சேலையை அணிவது மன நிம்மதியை அளிக்கும் என்பதால் ஏலத்தில் சேலைகள் வாங்கினோம், என்றனர். அதிகாரிகள் கூறுகையில், வழக்கமாக 100 சேலைகள் வரை விற்பனையாகும், தீபாவளி வருவதால் 300க்கும் மேற்பட்ட சேலைகள் விற் பனையாகின, என்றனர்.