கவர்னர் பெயரில் இருந்த நிலம் தனியாரால் கபளீகரம்
ஆலங்குளம்: மாறாந்தையில் கவர்னர் பெயரில் இருந்த, ஒரு ஏக்கர் 50 சென்ட் நிலத்தை சோலார் நிறுவனங்கள் கபளீகரம் செய்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகே மாறாந்தையில், கடந்த ஒரு ஆண்டாக, தனியார் நிலங்களை வாங்கி, சோலார் நிறுவனங்கள் சூரிய ஒளி மூலம், மின்சாரம் தயாரிக்கும் நிறுவனங்களை நிறுவி வருகின்றன. கடந்த, 1997ல், மாறாந்தை பகுதியில் ஹரி என்பவர், தனக்கு சொந்தமான ஒன்றரை ஏக்கர் நிலத்தை, அரசின் வேளாண் திட்டத்திற்கு வழங்கி, கவர்னர் பெயருக்கு மாற்றம் செய்திருந்தார். அந்த நிலத்தில், 90 சென்ட் நிலத்தை தனியாகவும், 60 சென்ட் நிலத்தை தனியாகவும், தனியார் சோலார் நிறுவனங்கள் தங்கள் பெயருக்கு பட்டா மாற்றம் செய்துள்ளன. கவர்னர் பெயரில் உள்ள நிலத்தை தனியாருக்கு பட்டா மாற்றம் செய்ய, ஆலங்குளம் சார் - பதிவாளர்கள் உடந்தையாக இருந்துள்ளனர். அந்த நிலத்தை மீட்டு, பொது பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என சமூக ஆர்வலர் எஸ்.பி.முத்துராமன், தென்காசி கலெக்டரிடம் நேற்று புகார் தெரிவித்தார்.