| ADDED : ஆக 26, 2011 01:29 AM
கும்பகோணம்: சுவாமிமலையில் உள்ள இரண்டு திருமண மண்டபங்களில் முறைகேடாக
பயன்படுத்திய 11 சிலிண்டர்களை வட்ட வழங்கல் துறையினர் பறிமுதல் செய்தனர். கும்பகோணத்தை அடுத்த சுவாமிமலையில் 15 க்கும் மேற்பட்ட திருமண மண்டபங்கள்
உள்ளன. இந்த மண்டபங்களில் சிலவற்றில் வீடுகளுக்கு பயன்படுத்தப்படும்
சிலிண்டர்களை சிலர் அனுமதியின்றி வணிக நோக்கத்தில் பயன்படுத்துவதாக ரகசிய
தகவல் கிடைத்தது. இதையடுத்து நேற்று முன்தினம் மாலை கும்பகோணம் வட்ட
வழங்கல் அலுவலர் முருகதாஸ், வருவாய் ஆய்வாளர்கள் சண்முகம், ரவிச்சந்திரன்,
உத்திராபதி, உதவியாளர் வெங்கடராஜஞுலு ஆகியோர் கொண்ட குழுவினர் சுவாமிமலை
திருமஞ்சனவீதியில் உள்ள இரண்டு திருமண மண்டபங்களில் அதிரடியாக ஆய்வு
மேற்கொண்டனர். அப்போது, இரண்டு மண்டபங்களிலும் 11 சிலிண்டர்கள்
அனுமதியின்றி முறைகேடாக பயன்படுத்தியது தெரியவந்தது. இதையடுத்து வட்ட
வழங்கல் துறையினர் 11 சிலிண்டர்களையும் பறிமுதல் செய்தனர்.