| ADDED : செப் 09, 2011 01:58 AM
தஞ்சாவூர்: தஞ்சைக்கு நண்பரின் திருமணத்துக்கு வந்த நர்ஸிங் படிக்கும்
மாணவர், குளிக்கும்போது ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டதால் அவரது உடலை
தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது. சென்னை கீழ்ப்பாக்கம்
மருத்துவக்கல்லூரியில், தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டைச் சேர்ந்த நாகராஜன்
(23) முதுகலை 'நர்ஸிங்' பயிற்சி படிப்பு படிக்கிறார். இவருக்கு நேற்று
தஞ்சையில் திருமணம் நடந்தது. திருமணத்துக்காக அவருடன் படிக்கும் நண்பர்கள்
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தைச் சேர்ந்த நசீர் அகமது (21),
காஞ்சிபுரத்தைச் சேர்ந்த வினோத் (24), சென்னை கே.கே.நகரைச் சேர்ந்த
செல்வராஜ் (23) உள்ளிட்ட ஒன்பது பேர் நேற்று தஞ்சை வந்தனர். திருமணம்
முடிந்தபின், நண்பர்கள் அனைவரும், தஞ்சை பள்ளியக்ரஹாரம் வெண்ணாற்றில்
இறங்கி குளித்தனர். அப்போது, ஆற்றில் தண்ணீரின் வேகம் அதிகமாக இருந்ததால்,
ஆற்றின் போக்கில் நசீர் அகமது அடித்துச் செல்லப்பட்டார். அவரைக் காப்பாற்ற
நண்பர்களும், அப்பகுதி மக்களும் முயற்சித்தும் காப்பாற்ற முடியவில்லை.
இதையடுத்து அவர் ஆற்றில் மூழ்கி இறந்திருக்கலாம் என்று கருதிய பொதுமக்கள்,
உடனடியாக தஞ்சை மேற்கு போலீஸார் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல்
தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு சென்ற போலீஸாரும், தீயணைப்பு
படையினரும் இணைந்து நசீர் அகமது உடலை தேடி வருகின்றனர்.