மாவட்டத்தில் 863 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை * பாதுகாப்பில் 1500 போலிசார்
தேனி: மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 863 இடங்களில் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. விழா பாதுகாப்பு பணிகளில் 1500 போலீசார் ஈடுபட உள்ளனர்.இம்மாவட்டத்தில் 5 சப்டிவிஷன்களில் 863 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்ய போலீசார், ஆர்.டி.ஓ., அனுமதி அளித்துள்ளனர். கூடுதலாக வைக்கப்படும் இடங்களுக்கு போலீசார் அனுமதி அளிக்க வில்லை. இந்நிலையில் விதிமுறையை மீறி கம்பம் பள்ளி கொண்ட பெருமாள் கோயிலில் 10 அடி உயரத்திற்கு மேல் 3 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்ய தயார் செய்யப்பட்டன. இதனால் விதிமீறப்பட்டுள்ளது என தெரிவித்து அந்த சிலைகளை நிர்வாகிகள் அகற்றி பாதுகாப்பான இடத்திற்கு மாற்றினர். மேலும் ஹிந்து முன்னணி, ஹந்து எழுச்சி முன்னணி, பா.ஜ., ஆர்.எஸ்.எஸ்., உள்ளிட்ட ஹிந்து அமைப்புகள் சார்பில் பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் இன்று காலை பிரதிஷ்டை செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடகக உள்ளன. 863 இடங்களில் சிலைகள் வைக்கப்படும் நிலையில் மாவட்டம் முழுவதும் எஸ்.பி., ஏ.டி.எஸ்.பி.,க்கள், டி.எஸ்.பி.,க்கள் தலைமையில் 1500 போலீசார் பாதுகாப்பில் ஈடுபட உள்ளனர். போலீசார் கூறுகையில், ‛வருவாய்த்துறையினர் முறையான அனுமதி பெற்று 900 சிலைகள் வைக்க கோரிக்கை வந்துள்ளன. இதில் விதிமுறை பின்பற்றப்படுபவர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.', என்றனர்.