வடமலை நாச்சியம்மன் கோயிலுக்கு ரோடு வசதி இன்றி பக்தர்கள் சிரமம்
போடி : போடி அணைக்கரைப்பட்டி ஊராட்சியில் வடமலை நாச்சியம்மன் கோயிலுக்கு செல்ல ரோடு வசதி இன்றி பக்தர்கள் மட்டும் இன்றி விவசாயிகள் சிரமப்படுகின்றனர்.650 ஆண்டுகளுக்கு முன் கண் கொடுத்த ராசு நாயக்கர் காலத்தில் இக்கோயில் உருவானதாக ஸ்தல வரலாறு கூறுகிறது. இக்கோயிலுக்கு செல்ல போடியில் இருந்து 7 கி.மீ., தூரம் ரோடு வசதியும், 2 கி.மீ., தூரம் மலைப் பாதையில் நடந்து செல்ல வேண்டும். பல நூற்றாண்டுகளுக்கு முன் உருவான இக்கோயிலில் வாரம் தோறும் வெள்ளிக் கிழமை 12:00 மணி அளவில் உச்சி கால பூஜையும், மாதம் தோறும் பவுர்ணமி பூஜைகள் நடப்பது வழக்கம்.துவக்கத்தில் பாதை வசதி இல்லாமல் இருந்தது. விவசாயிகள் மட்டும் இன்றி வெளியூரில் இருந்து பக்தர்களின் வருகை அதிகரித்தது. இதனால் கோயில் நிர்வாகம். விவசாயிகள் இணைந்து கோயிலுக்கு செல்லும் பாதையின் இருபுறமும் சூழ்ந்து இருந்த மரங்கள், செடிகளை அகற்று 2 கி.மீ., துாரம் ரோடுக்கான பாதை வசதி ஏற்படுத்தினர். தற்போது ரோடு வசதி இல்லாமல் குண்டும், குழியுமாகவும் மண் பாதையாக உள்ளதால் 2 கி.மீ., துாரம் பக்தர்கள் நடந்து செல்வதோடு, விளை பொருட்களை விவசாயிகள் தலைச் சுமையாக கொண்டு வர வேண்டிய நிலையில் சிரமப்படுகின்றனர். பக்தர்கள், விவசாயிகளின் சிரமங்களை தவிர்க்க வடமலை நாச்சியம்மன் கோயிலுக்கு ரோடு வசதி செய்து தர போடி ஒன்றிய நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்தி உள்ளனர்.