குழாய் உடைந்து ரோட்டில் வீணாவதால் கைலாசபட்டியில் குடிநீர் தட்டுப்பாடு
பெரியகுளம்: தென்கரை பேரூராட்சி குழாய் உடைந்து வீணாவதால் கைலாசபட்டியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.பெரியகுளம் தென்கரை பேரூராட்சி குடிநீர் அபிவிருத்தி திட்டத்தில் குடிநீர் வாரியம் மூலம் இப் பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளுக்கு தினமும் 20 லட்சம் லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும்.இதற்காக சோத்துப்பாறை அணைக்கு கீழ் வெளியேறும் உபரி நீரை 30 ஆயிரம் லிட்டர் கொள்ளவு தரைமட்ட தொட்டியில் சேகரிக்கப்படுகிறது. அங்கிருந்து மூன்றரை கி.மீ., தூரத்தில் வட்டகரட்டில் அமைக்கப்பட்டுள்ள 2 மில்லியன் லிட்டர் கொள்ளளவு குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் வந்து, சுத்திகரித்து குழாய் மூலம் 7.5 கி.மீ., தூரத்தில் உள்ள தென்கரைப் பேரூராட்சி அலுவலக தரைமட்ட தொட்டியில் சேகரிக்கப்படுகிறது.பின் பகிர்மான குழாய் மூலம் வார்டுகளுக்கு சப்ளை செய்யப்படுகிறது.இந்நிலையில் 10 வது வார்டு தேனி -பெரியகுளம் ரோடு பெட்ரோல் பல்க் அருகே குடிநீர் குழாய் ஐந்து நாட்களாக உடைந்து தினமும் குடிநீர் வீணாகி செல்கிறது. இரவில் பெரியகுளம்- தேனி ரோட்டில் தண்ணீர் தேங்குகிறது. சுத்திகரித்து பல கி.மீ. துாரம் கடந்து வரும் குடிநீர் கைலாசபட்டி திரவியம் கல்லூரி அருகே 1.70 லட்சம் கொள்ளவு தொட்டிகளுக்கு குடிநீர் செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் கைலாசபட்டியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. குடிநீர் வாரியம் குழாய் உடைப்பை விரைவில் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.