பம்பையில் இருந்து இண்டர் ஸ்டேட் சர்வீசுக்கு 67 பஸ்களுக்கு அனுமதி
சபரிமலை: பக்தர்களின் வசதிக்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பம்பை வர இண்டர் ஸ்டேட் சர்வீஸ் சேவைக்கு 67 பஸ்களை கேரள அரசு போக்குவரத்து கழகம் அனுமதித்துள்ளது. இதனால் நீண்டநேரம் காத்திருப்பின்றி பக்தர்கள் தரிசனம் நடத்தி செல்கின்றனர். சபரிமலையில் நடப்பு மண்டல சீசனில் பக்தர்கள் கூட்டம் அதிகம் உள்ளது. இதையடுத்து கேரள அரசு போக்குவரத்துக் கழகம் பக்தர்களுக்காக கூடுதல் பஸ்களை இயக்கி வருகிறது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் பக்தர்களுக்காக இண்டர் ஸ்டேட் சர்வீஸ் நடத்த கேரள அரசு போக்குவரத்துக் கழகம் 67 பஸ்களை ஒதுக்கியுள்ளது. கோவையில் இருந்து தினமும் இரவு 9:30 மணிக்கு பம்பைக்கு பஸ் புறப்படும். பம்பையில் இருந்து காலை 9:00 மணிக்கு கோவைக்கு பஸ் புறப்படும். அதுபோல பம்பையில் இருந்து தென்காசிக்கு தினமும் காலை 9:00 மணிக்கு பஸ் புறப்படும். தென்காசியில் இருந்து தினமும் இரவு 7:00 மணிக்கு பம்பைக்கு புறப்படும். இது போல பழனி, திருநெல்வேலி, கம்பம், சென்னை உள்ளிட்ட பகுதிகளுக்கும் பஸ்கள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மண்டல கால பூஜைக்காக சபரிமலை நடை திறந்த நவ., 16- முதல் நேற்று இரவு வரை 13 லட்சம் பக்தர்கள் தரிசனம் நடத்தியுள்ளனர். முதல் மூன்று நாட்களைத் தவிர்த்து மீதமுள்ள நாட்களில் பக்தர்கள் நீண்டநேரம் காத்திருக்காமல் தரிசனம் முடித்து செல்கின்றனர்.