உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / 1.60 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தில் வேளாண் துறை சுணக்கம்

1.60 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தில் வேளாண் துறை சுணக்கம்

கம்பம்: தேனி மாவட்டத்தில் ஒரு லட்சத்து 60 ஆயிரம் மரக்கன்றுகள் நடவு செய்யும் வேளாண் துறை திட்டத்தில் நடவடிக்கையில் வேகம் இல்லாததால், மரக்கன்றுகள் தேக்கமடைந்துள்ளது. தமிழக அரசின் நீடித்த நிலையான பசுமை போர்வை இயக்க திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு இலவசமாக மரக்கன்றுகளை வழங்கி, நடவு செய்ய அரசு திட்டமிட்டது. இதற்கென ஒவ்வொரு வட்டாரத்திலும் ஒவ்வொரு நிதியாண்டிற்கும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. தேனி மாவட்டத்தில் எட்டு வட்டாரங்களில் 2023-20-24 ம் ஆண்டிற்கு ஒரு லட்சத்து 60 ஆயிரம் மரக்கன்றுகள் நடவு செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஒரு வட்டாரத்திற்கு 20 ஆயிரம் இலக்கு. இதில் தேக்கு, பலா, குமிழ், மகாகனி, சவுக்கு மரக்கன்றுகள் அந்தந்த வனத்துறை அலுவலகங்களில் இருப்பு வைக்கப்பட்டது.வரப்பு ஒரங்கள், ஒடைகள், பாதை ஓரங்கள் என கிடைக்கும் இடங்களில் நடவு செய்ய அறிவுறுத்தப்பட்டது. விரும்பும் விவசாயிகள் ஆதார், சிட்டா, பாங்க் பாஸ்புக் முன்பக்கம் உள்ளிட்ட ஆவணங்களை அந்தந்த வேளாண் உதவி இயக்குநர் அலுவலகங்களில் கொடுத்து பெற்றுக் கொள்ளலாம் என உதவி இயக்குநர்கள் அறிவித்தனர். ஆனால் அறிவிப்போடு சரி. யாரும் இந்த பணியை முன்னெடுக்கவில்லை. இதனால் மரக்கன்றுகள் நடவு என்பது ஒரு சில வட்டாரங்களில் பெயரளவிற்கு நடைபெற்றது. பெரும்பாலான வட்டரங்களில் இந்த பணியில் ஆர்வம் காட்டவில்லை. இதனால் அனுமதிக்கப்பட்ட மரக்கன்றுகள் தேக்கமடைந்துள்ளது. எட்டு உதவி இயக்குநர்களிடமும் இது தொடர்பான விபர அறிக்கையை வேளாண் இணை இயக்குநர் கேட்டு பெற்று மரம் வளர்ப்பு திட்டத்தில் கூடுதல் கவனம் செலுத்த அறிவுறுத்த வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி