உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / அரசு வேலை வாங்கித்தருவதாக ராணுவ வீரர் மனைவியிடம் ரூ.10 லட்சம் மோசடி

அரசு வேலை வாங்கித்தருவதாக ராணுவ வீரர் மனைவியிடம் ரூ.10 லட்சம் மோசடி

பெரியகுளம்: தேனி மாவட்டம் பெரியகுளத்தில் ராணுவ வீரரின் மகள் உமாமகேஸ்வரிக்கு திண்டுக்கல் மாவட்டம் பழநி பாலதண்டாயுதபாணி சுவாமி கோயிலில் எழுத்தர் பணி வாங்கித்தருவதாக, அவரது மனைவி பத்மாவதியிடம் ரூ.10 லட்சம் பெற்றுக் கொண்டு மோசடி செய்த ராஜகோபால், முருகேசன் மீது வடகரை போலீசார் மோசடி வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர். பெரியகுளம் வடக்கு பாரஸ்ட் ரோடு யூதேயா தெருவைச் சேர்ந்த ராணுவவீரர் முருகன் 48. சில ஆண்டுகளுக்கு முன் பணியில் இருந்தபோது புற்றுநோயால் இறந்தார். இவரது மனைவி பத்மாவதி 44. இத்தம்பதிக்கு மகன், மகள் உள்ளனர். பத்மாவதிக்கு பழக்கமான வத்தலக்குண்டு பீலீஸ்புரம் ராஜகோபால் 42, அவரது நண்பரான கரூர் மாவட்டம் மலைப்பட்டி முருகேசன் 48, ஆகியோர் அரசியல் செல்வாக்குடையவர்கள் என கூறி அறிமுகமாகினர். 2022ல் பத்மாவதி மகள் உமா மகேஸ்வரிக்கு ஹிந்து சமய அறநிலையத்துறையின் கீழ் இயங்கும் பழநி பாலதண்டாயுதபாணி கோயிலில் எழுத்தர் வேலை வாங்கித் தருவதாகவும், கரூரைச் சேர்ந்த ஒரு அமைச்சர் மூலம் ரூ.10 லட்சம் கொடுத்து வேலை வாங்கலாம் எனவும் இருவரும் ஆசை வார்த்தை கூறினர். அதனை நம்பி பத்மாவதி நகைகளை அடகு வைத்து, கடன் வாங்கி ரூ.10 லட்சத்தை ராஜகோபால், முருகேசனிடம் கொடுத்தார். பணத்தை பெற்ற இருவரும் அரசு வேலை வாங்கித் தராமலும், பணத்தை திரும்பத் தராமலும் மோசடி செய்தனர். இருவர் மீதும் பெரியகுளம் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் பத்மாவதி வழக்கு தொடர்ந்தார். நீதிமன்ற உத்தரவின்படி வடகரை எஸ்.ஐ., விக்னேஷ் மோசடி வழக்கு பதிந்து ராஜ கோபால், முருகேசனிடம் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !