பணி நிரந்தரம் கோரி துணை சுகாதார செவிலியர்கள் உண்ணாவிரதம்
சென்னை, பணி நிரந்தரம் கோரி, சென்னை சிவானந்தா சாலையில், தமிழ்நாடு நகர்புற தாய்மை துணை சுகாதார செவிலியர்கள் சங்கத்தினர், நேற்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து, அச்சங்கத்தின் தலைவர் பாலசுப்பிரமணியன் கூறியதாவது: மருத்துவமனைகளில் கர்ப்பிணியர் பதிவு செய்வது முதல், அவர்கள் பிரசவிக்கும் காலம் வரை கண்காணிப்பது வரையிலான பணிகளை செய்து வருகிறோம். எங்களது நீண்ட நாள் கோரிக்கையான பணி நிரந்தத்தை, அரசு செய்ய வேண்டும். மேலும், நகர்ப்புற துணை சுகாதார செவிலியர்களுக்கு விரும்பும் இடங்களுக்கு பணியிடம் மாறுதல், பணிமூப்பு அடிப்படையில் பதவி உயர்வுகள் வழங்க வேண்டும். கிராம சுகாதார செவிலியர்களுக்கு வழங்குவதுபோல, நகர்ப்புற துணை சுகாதார செவிலியர்களுக்கு மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும். சம வேலைக்கு சம ஊதியம் என்ற அடிப்படையில் ஊதியம் வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.