உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / மழை குறைந்ததால் 18ம் கால்வாய் சீரமைப்பு பணிகள் மும்முரம் - தினமலர் செய்தி எதிரொலி

மழை குறைந்ததால் 18ம் கால்வாய் சீரமைப்பு பணிகள் மும்முரம் - தினமலர் செய்தி எதிரொலி

கூடலுார்: மழை குறைந்ததால் சேதமடைந்திருந்த 18ம் கால்வாய் சீரமைப்பு பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. லோயர்கேம்ப் முல்லைப் பெரியாற்றிலிருந்து கூடலுார், கம்பம், உத்தமபாளையம், கோம்பை, பண்ணைப்புரம், தேவாரம் வழியாக போடி வரை செல்லும் 18ம் கால்வாய் திட்டம் 47 கி.மீ., நீளம் கொண்டதாகும். கால்வாய் மூலம் 4615 ஏக்கர் நேரடி பாசனங்கள் பயன்பெறும் வகையில் உள்ளன. மேலும் 44 கண்மாய்களில் தண்ணீர் நிரம்புவதால் நிலத்தடி நீர்மட்டம் உயரும். இக்கால்வாயில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபரில் தண்ணீர் திறந்து விடுவது வழக்கம். 2023ல் 2 மாதங்கள் தாமதமாக டிச.19ல் திறக்கப்பட்டது. கடந்த ஆண்டு நீர்மட்டம் திருப்திகரமாக இருந்த போதிலும் அரசு உத்தரவு கிடைப்பதில் ஏற்பட்ட காலதாமதத்தால் டிச.21ல் திறக்கப்பட்டது. ஏற்கனவே கரைப்பகுதி சேதமடைந்திருந்த நிலையில் பல இடங்களில் உடைப்பு ஏற்பட்டது. அதனால் தாமதமாக நீர் திறப்பு இருந்த போதிலும் முழுமையாக கடைமடை வரை தண்ணீர் செல்லவில்லை. முழுமையாக ஆக்கிரமிப்புகள் அகற்றி தூர்வாரி கரைப்பகுதிகளை சீரமைக்க வேண்டுமென விவசாயிகள் வலியுறுத்தி வந்தனர். இதனைத் தொடர்ந்து அரசு ரூ.12 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது. சீரமைப்பு பணிகள் துவங்குவதற்கு முன் அக்.1ல் தண்ணீர் திறக்க அரசு உத்தரவிட்டிருந்தது. ஆனால் அக்.17ல் பெய்த கனமழையால் லோயர்கேம்ப் அருகே கால்வாயின் துவக்கப் பகுதி மற்றும் பல இடங்களில் உடைப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது. தற்போது மழை குறைந்ததால், லோயர்கேம்ப் தலைமதகு அருகே கரை உடைப்பு மற்றும் சேத மடைந்த பல பகுதிகளை சீரமைக்கும் பணியை நீர்வளத்துறை அதிகாரிகள் மும்முரமாக செய்து வருகின்றனர். இதில் தூர்வாருவது சேதமடைந்த கரைப் பகுதிகள் மற்றும் சிறிய பாலங்களை பலப்படுத்துவது உள்ளிட்ட பணிகள் நடைபெறும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை