வனக்காவலரை தடுத்த 10 பேர் மீது வழக்கு
கடமலைக்குண்டு: கண்டமனூர் வனச்சரகத்தில் வன காவலராக பணிபுரிந்து வருபவர் நந்தினி. இரு நாட்களுக்கு முன் கொங்கரேவு முதல் கடமலைக்குண்டு வரை ரோடு அமைக்கும் பணி நடந்து வந்தது. இந்த ரோட்டில் 20 மீட்டர் நிலம் வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள காப்பு நிலம் என்பது தெரிய வந்தது. இது குறித்து விசாரிப்பதற்காக தனது டூவீலரில் நந்தினி அப்பகுதிக்கு சென்றார். அப்போது பொன்னம்படுகையைச்சேர்ந்த சவுந்தர பாண்டியன் மற்றும் சிலர் நந்தினியின் டூவீலர் சாவியை எடுத்துக் கொண்டு பணி செய்ய விடாமல் தடுத்து, தகாத வார்த்தைகள் பேசி உள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் அப்பகுதிக்கு சென்று டூவீலரை மீட்டனர். நந்தினி புகாரில் மயிலாடும்பாறை போலீசார் சவுந்தர பாண்டியன் உட்பட 10 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.