கோயில் சுதை சிலையை மாற்றிய அறங்காவலர்கள் 5 பேர் மீது வழக்கு
தேனி:தேனிமாவட்டம் பெரியகுளம் அருகே மேல்மங்கலம் பட்டாளம்மன் முத்தையா கோயிலில் அனுமதியின்றி சுதை சிலையை மாற்றிய அறங்காவலர்கள் 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இக்கோயில் கும்பாபிஷேகத்திற்கான பணிகள் நடந்து வருகிறது. இக் கோயிலில் உள்ள சுதை சிற்பங்களில் சேதமடைந்த பகுதிகளை சுண்ணாம்பு கலவை கொண்டு சீரமைக்க மட்டும் அரசு அனுமதி வழங்கி இருந்தது. ஆனால் அதனை மீறி கோயில் சுற்று பிரகாரத்தில் இருந்த பேயன், பேச்சி சிலைகளை அகற்றி, வேறு உருவத்தில் உள்ள பேச்சியம்மன் சிலையை வைத்ததாக அறங்காவலர்கள் 5 பேர் மீது ஹிந்து சமய அறநிலையத் துறை ஆய்வாளர் தனலட்சுமி ஜெயமங்கலம் போலீசில் புகார் அளித்தார். இதன்படி அறங்காவலர்களான மேல்மங்கலத்தை சேர்ந்த நீலமேகம், ரவிக்குமார், நடராஜன், முத்துக்கிருஷ்ணன், கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.