உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / 24 ஊராட்சிகளில் சுகாதாரம் குறித்து மத்திய குழு வீடு வீடாக சென்று ஆய்வு

24 ஊராட்சிகளில் சுகாதாரம் குறித்து மத்திய குழு வீடு வீடாக சென்று ஆய்வு

கம்பம்: ஊராட்சிகளில் சுகாதாரம் குறித்து மத்திய குழுவினர் வீடு, வீடாக சென்று ஆய்வு செய்தனர். மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் ஊராட்சிகளில் சுகாதாரம் பாதுகாக்க பல கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்கிறது. ஊராட்சிகளில் தனிநபர் கழிப்பறை கட்ட ரூ 12 ஆயிரம் வழங்குகிறது. மத்திய அரசின் நிதி உரிய முறையில் பயன்படுத்தப்பட்டுள்ளதா என்பதை ஆய்வு செய்ய மத்திய குழுவினர் தேனி மாவட்டம் வந்துள்ளனர். மாவட்டத்தில் உள்ள 130 ஊராட்சிகளில் 24 ஊராட்சிகள் தேர்வு செய்து ஆய்வுக்குட்படுத்தப்பட்டன. நேற்று முன்தினம் ராயப்பன்பட்டியில் மத்திய குழுவின் கணக்கெடுப்பாளர் ரவிச்சந்திரன் தலைமையில் தேனி மாவட்ட உதவி திட்ட அலுவலர் சேகர், உத்தமபாளையம் பி.டி.ஒ. க்கள் சொகதீசன் , ஜெயப்பிரகாசம், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பாண்டி மீனா, ஊராட்சி செயலர் சுந்தர பாண்டியன் ஆகியோர் ராயப்பன் பட்டியில் வீதி வீதியாக சென்று ஆய்வு மேற்கொண்டனர். வீடுகளில் கழிப்பறைகள் முறையாக கட்டப்பட்டுள்ளதா, பள்ளிகள் , அங்கன்வாடிகளில் கழிப்பறைகள் பராமரிக்கப்படுகிறதா, குடிநீர் உரிய முறையில் குளோரின் கலந்து சப்ளை செய்யப்படுகிறதா, திறந்தவெளி கழிப்பறைகள் உள்ளதா, பொது கழிப்பறைகள் முறையாக பராமரிக்கப்படுகிறதா என்பது குறித்து ஆய்வு செய்தனர். ஊராட்சிகளில் மேற்கொள்ளப் பட்ட ஆய்வுகள் நேற்று நிறைவு பெற்றது. பெரும்பாலும் கிராமப்புற சுகாதாரம் திருப்தியான நிலையில் இருப்பதாக மத்திய குழு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !