அறிமுகம் இல்லாதவர்களின் அலைபேசி எண்களுக்கு பணம் அனுப்ப வேண்டாம்; சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை
தேனி : 'அலைபேசி செயலி., ஜிபே மூலம் அறிமுகம் இல்லாதவர்களின் அலைபேசி எண்களுக்கு பணம் அனுப்பினால் வங்கி கணக்கு முடங்கும் அபாயம் உள்ளது,' என, தேனி சைபர் கிரைம் போலீசார் எச்சரித்துள்ளனர். பொது மக்கள் தங்களிடம் பண உதவி கேட்கும் நபர்களுக்கு உதவும் நோக்கத்தில் அறிமுகம் இல்லாத நபர்களின் அலைபேசி எண்களுக்கு வங்கி செயலி, ஜிபே செயலி மூலம் பணம் அனுப்புகின்றனர். பணம் அனுப்பியவரின் அலைபேசி எண் குற்ற நடவடிக்கையில் இருந்தால், பரிவர்த்தனை கணக்கு எண் என கணக்கில் எடுத்து, உதவிய நபரின் அலைபேசி எண்ணில் இணைக்கப்பட்ட வங்கிக்கணக்கு எண்ணும் முடக்கப்படும். தேனி மாவட்டத்தை சேர்ந்த சிலர், வடமாநில தொழிலாளர்களுக்கு பணம் கொடுக்க ஜிபே மூலம் பணம் அனுப்பியுள்ளனர். இதில் பணம் பெறுபவரின் அலைபேசி எண், வடமாநிலத்தை சேர்ந்த குற்றவழக்கில் சம்பந்தப்பட்டவர்களின் தொடர்பில் இருப்பதால் பணம் அனுப்பி உதவிய நபரில் எண்ணுடன் இணைக்கப்பட்ட வங்கி பணப் பரிவர்த்தனையும் முடக்கப்பட்டுள்ளது. இம்மாதிரி வங்கிச் செயலி, ஜிபே மூலம் அறிமுகம் இல்லாத நபர்களுக்கு பணம் அனுப்பி, தங்களது வங்கிக் கணக்கு முடக்கப்பட்டுள்ளதாக 10 பேர் தேனி சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளனர். போலீசார் கூறுகையில், 'பொது மக்கள் அறிமுகம் இல்லாத நபர்களின் அலைபேசி எண்களுக்கு ஜிபே, வங்கிச் செயலி மூலம் பணம் அனுப்ப வேண்டாம். உஷாராக இருக்க வேண்டும்,', என்றனர்.