பல மாதங்களாக அதிகாரிகள் இன்றி கூடலுாரில் வளர்ச்சிப் பணிகள் பாதிப்பு
கூடலுார்: கூடலுார் நகராட்சியில் பல மாதங்களாக கமிஷனர் உட்பட அதிகாரிகள் இன்றி வளர்ச்சிப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது.கூடலுார் நகராட்சியில் 21 வார்டுகள் உள்ளன. 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். கேரளாவை ஒட்டியுள்ள நகராட்சி என்பதால் வளர்ச்சிப் பணிகள் கூடுதலாக செய்ய வேண்டியுள்ளது.கடந்த ஜூலையில் நகராட்சியில் கமிஷனராக இருந்த காஞ்சனா மாறுதலாகி சென்றார். அதன்பின் நிரந்தர கமிஷனர் இன்றி கம்பம், சின்னமனூர் கமிஷனர்கள் கூடுதல் பொறுப்பாக கவனித்து வருகின்றனர். நகராட்சி பொறியாளர், நகரமைப்பு ஆய்வாளர், சர்வேயர் ஆகியோர்களும் பல மாதங்களாக நியமிக்கப்படாததால் மேலும் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது. வளர்ச்சிப் பணிகள் செய்யவும், செய்த பணிகளுக்கு பணம் பட்டுவாடா செய்வதிலும் காலதாமதம் ஏற்படுகிறது. சர்வேயர் மற்றும் நகரமைப்பு ஆய்வாளர் இல்லாததால் பல ஆண்டுகளாக தெருக்களில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்ற முடியாமல் உள்ளது. பொதுமக்கள் தொடர்ந்து புகார் அளித்தாலும் நிரந்தர அதிகாரிகள் இல்லாததால் தீர்வு ஏற்படுவதில்லை. இது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. நிரந்தர கமிஷனர், நகராட்சி பொறியாளர், நகரமைப்பு ஆய்வாளர், சர்வேயர் ஆகியோர்களை உடனடியாக நியமிக்க அரசு முன்வர வேண்டும்.