சுரபி நதிக்கரையின் குறுக்கே சேதமடைந்த சிறிய பாலம் குச்சனூரில் பக்தர்கள் அவதி
சின்னமனூர்: குச்சனூர் சனீஸ்வர பகவான் கோயில் முன்பு ஓடும் சுரபி நதியின் குறுக்கே உள்ள சிறிய பாலம் சேதமடைந்துள்ளதால் பக்தர்கள் அவதிப்படுகின்றனர்.குச்சனூரில் சனீஸ்வரர் பகவான் சுயம்புவாக எழுந்தருளியுள்ளார். சனீஸ்வரருக்கு என்று தனிக் கோயில் தமிழகத்தில் இங்கு மட்டுமே உள்ளது. குறிப்பாக சனிக்கிழமைகளில் பத்தர்கள் அதிக எண்ணிக்கையில் சுவாமி தரிசனத்திற்கு வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் ஆடியில் நடைபெறும் பெருந் திருவிழாவில் மாநிலம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கில் பக்தர்கள் குவிவார்கள்,கோயிலிற்கு வரும் பத்தர்கள், கோயிலிற்கு முன்புறம் உள்ள சுரபி நதியில் நீராடி பின் தங்களது நேர்த்தி கடன்களை செலுத்தி சுவாமி தரிசனம் செய்கின்றனர். சுரபி நதியில் அக்கரைக்கு செல்ல சிறிய பாலம் குறுக்கே கட்டப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. கடந்த சில ஆண்டுகளாக கைப்பிடி சுவர் இடிந்து விழுந்தும், பாலம் சேதமடைந்த நிலையிலும் உள்ளது. தற்போது ஆடிப் பெருந் திருவிழா நடைபெற உள்ளது. எனவே பாலத்தை இடித்து விட்டு புதிய பாலம் கட்ட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.