| ADDED : நவ 25, 2025 05:38 AM
தேவாரம்: தேனி மாவட்டம் தேவாரத்தில் விவசாய இலவச மின் இணைப்பு வழங்க ரூ.20 ஆயிரம் லஞ்சம் வாங்கி கைதான இளநிலை மின் பொறியாளர் லட்சுமணன் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். தேவாரம் வடக்கு தெரு முன்னாள் ராணுவ வீரர் ராமச்சந்திரன் 44. அவரது தோட்டத்திற்கு இலவச மின் இணைப்பு பெற விண்ணப்பம் செய்தார். 10 நாட்களுக்கு முன்பு அதற்கான அனுமதி பெற்றார். இதற்கான டிபாசிட் ரூ. 9520 செலுத்தி ரசீது பெற்றார். இந்நிலையில் பெரியகுளம் வைத்தியநாதபுரத்தை சேர்ந்த, தேவாரம் உதவி மின் பொறியாளர் அலுவலகத்தில் இளநிலை பொறியாளராக பணியாற்றிய லட்சுமணன் 38, மின் இணைப்பு வழங்க ராமச்சந்திரனிடம் ரூ.20 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். தேனி லஞ்ச ஒழிப்பு போலீசில் ராமச்சந்திரன் புகார் செய்தார். திண்டுக்கல் டி.எஸ்.பி., நாகராஜன் தலைமையில் தேனி இன்ஸ்பெக்டர் ராமேஸ்வரி, ஜெயப்பிரியா நான்கு நாட்களுக்கு முன் ரசாயனம் தடவிய 500 ரூபாய் நோட்டுகளை ராமச்சந்திரனிடம் வழங்கினர். அலுவலகத்தில் வைத்து அவரிடமிருந்து ரூ.20 ஆயிரத்தை லட்சுமணன் வாங்கிய போது போலீசார் இளநிலை பொறியாளரை கைது செய்து, பணத்தை பறிமுதல் செய்தனர். இதனால் லட்சுமணனை சஸ்பெண்ட் செய்து தேனி மின் மேற்பார்வை பொறியாளர் லட்சுமி உத்தரவிட்டார்.